பெங்களூர்: ஆர்சிபி அணியை பொறுத்தவரை விராட் கோலியை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களையும் மெகா ஏலத்தில் ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர்பி சிங் தெரிவித்துள்ளார். அதிகளவிலான ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் சென்று அவர்களை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்குவதே சாமர்த்தியம் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்வதற்கான விதிகள் பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் 6 வீரர்களை வரை ரீடெய்ன் செய்ய அனுமதி அளிக்கப்பட்டாலும், பிசிசிஐ வேறு மாதிரியான ட்விஸ்டை வைத்துள்ளது. அதாவது ரீடெய்ன் செய்யப்படும் வீரர்களுக்கான குறைந்தபட்ச தொகையே ரூ.11 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து அணிகளும் ரீடெய்ன் செய்வதற்கு பதிலாக ஆர்டிஎம் வாய்ப்புடன் களமிறங்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் 2 வீரர்களுக்கு ரூ.18 கோடி ஊதியமும், 2 வீரர்களுக்கு ரூ.14 கோடி ஊதியமும் வழங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் ரீடென்ஷன் பாலிசி எப்படி இருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர்பி சிங் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஆர்சிபி சிங் பேசுகையில், ஆர்சிபி அணியை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் கிடையாது என்று கருதுகிறேன். ஏனென்றால் விராட் கோலியை தவிர்த்து அனைத்து வீரர்களையும் ஆர்சிபி நிர்வாகம் ரிலீஸ் செய்யும் என்று நினைக்கிறேன். ரீடெய்ன் செய்வதற்கு பதிலாக அவர்கள் ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்துவார்கள்.
ஏனென்றால் ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் மெகா ஏலத்தில் ரூ.11 கோடி அல்லது அதற்கும் குறைவான தொகைக்கே வாங்க முடியும். குறைவாக வாங்கினால் அது அணி நிர்வாகத்திற்கு சாதகமாக அமையும். ஒருவேளை ரூ.11 கோடிக்கு அருகில் சென்றுவிட்டால், தாராளமான ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்தலாம். முகமது சிராஜ்-ம் அற்புதமான பவுலர் தான். அவரின் திறமையை குறைத்து மதிப்பிடவில்லை.
ஆனால் அவர் மெகா ஏலத்தில் ரூ.14 கோடி வரை செல்ல வாய்ப்புகள் குறைவு. அதற்கான தான் கூடுதல் ஆர்டிஎம் வாய்ப்புகளுடன் செல்ல வேண்டும் என்று கூறுகிறேன். ஆர்சிபி அணியை பொறுத்தவரை புதிய மனநிலையுடன் செல்ல வேண்டும். அவர்களுக்கு விராட் கோலி கட்டாயம் தேவை. ஏனென்றால் முதல் சீசனில் இருந்தே ஆர்சிபி அணிக்காக பெரும் உழைப்பை கொடுத்துள்ளார்.
அதனால் விராட் கோலியை சுற்றி ஆர்சிபி நிர்வாகம், தங்களது அணியை உருவாக்க வேண்டும். ஆர்சிபி அணியில் ரூ.18 கோடி ஊதியம் அளிக்கும் அளவிற்கு தகுதியான ஒரே வீரர் விராட் கோலி மட்டும் தான் என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணியின் கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் உள்ளிட்ட ஏராளமான திறமையான வீரர்கள் இருக்கின்றனர். இதனால் ஆர்சிபி அணியின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.