லக்னோ: 2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தற்காலிக கேப்டன் ஜிதேஷ் சர்மா, "இந்தத் தோல்வி நல்லதுதான்" எனக் கூறியிருக்கிறார். இதை அடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இதுதான் இப்போதைய நிலைமை எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய-பாகிஸ்தான் போர் பதற்றத்தின் காரணமாக ஐபிஎல் தடைபடுவதற்கு முன்பு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபாரமாக விளையாடி வந்தது. ஆனால், இடையில் விடப்பட்ட 15 நாட்கள் இடைவெளி காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது தோல்வியைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், ஜிதேஷ் சர்மாவின் பேச்சு விமர்சனத்தை சந்தித்துள்ளது.

இப்போட்டியின் முடிவில் அவர் பேசுகையில், "நாங்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை. துவக்கத்தில் எங்களது ஆட்டம் ஆக்ரோஷமாக இல்லை. ஆறு அல்லது ஏழு ஓவர்களுக்குப் பிறகுதான் நாங்கள் போட்டிக்கு உள்ளேயே வந்தோம். கடைசி நேரத்தில் எங்கள் பந்துவீச்சு துல்லியமாகவும் சரியாகவும் இருந்தது. ஆனால், இந்தப் போட்டியில் தோல்வியடைவது நல்லது என்று நான் நினைக்கிறேன்."
"சில சமயம் போட்டிகளில் தோல்வியடைவது நல்ல அறிகுறிதான். ஏனெனில், நாம் எந்த இடத்தில் சரியாக விளையாடவில்லை என்பதை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக அது அமையும். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டே இருந்தால், நாம் நமது தவறுகளைப் பார்க்க மாட்டோம்; அப்படியே சென்று கொண்டே இருப்போம். நல்ல விஷயம் என்னவென்றால், அனைத்து வீரர்களும் தங்களால் இயன்றதை செய்திருக்கிறார்கள். இந்தத் தோல்விக்குப் பிறகு அணியின் சூழ்நிலை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டும். நாங்கள் இங்கிருந்து முன்னேறி செல்வோம்" என்றார்.
இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 231 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன் 48 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.