மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில் கடைசி ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி க்ருனால் பாண்டியா தனது தம்பி ஹர்திக் பாண்டியாவின் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தினார். அவர் வீசிய கடைசி ஓவரில் அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்பத்தை ஏற்படுத்தினார்.
முன்னதாக க்ருனால் பாண்டியா ஓவரில் ஹர்திக் பாண்டியா இரண்டு சிக்ஸர்கள் உட்பட 19 ரன்களை விளாசி இருந்தார். ஆனால், அந்த அடியில் இருந்து மீண்ட க்ருனால் பாண்டியா கடைசி ஓவரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தபோது துவக்கத்தில் 12 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக பலரும் எண்ணிய நிலையில் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை ஆடினார். ஜோஸ் ஹேசல்வுட் வீசிய 14வது ஓவரில் 22 ரன்கள் சேர்த்தார். அடுத்து தனது அண்ணன் க்ருனால் பாண்டியாவின் 15வது ஓவரில் இரண்டு சிக்ஸ் உட்பட 19 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக இருந்தார்.
அதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 30 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என சூழ்நிலை மாறியது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடினார். மறுபுறம் திலக் வர்மாவும் சிக்ஸர்களை பறக்க விட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக போட்டி சூழ்நிலை மாறியது. திலக் வர்மா 29 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா அடுத்து 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெறும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் பந்து வீசி முடித்து இருந்தனர். அதுவரை பந்து வீசியவர்களில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே மீதம் இருந்தது. அது க்ருனால் பாண்டியாவின் உடைய ஓவர்தான்.
சுழற்பந்து வீச்சாளரான க்ருனால் பாண்டியாவை நம்பி பந்தை ஒப்படைத்தார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் படிதார். க்ருனால் பாண்டியா தான் வீசிய முதல் பந்திலேயே மிட்செல் சாண்ட்னர் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்த பந்தில் தீபக் சாஹர் விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன் பிறகு இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்தார். கடைசி இரண்டு பந்துகளில் மும்பை இந்தியன்ஸ் இரண்டு சிக்ஸ் அடித்தால் போட்டி சூப்பர் ஓவருக்கு செல்லும் என்ற நிலை இருந்தது. அப்போது நமன் திர் களத்தில் இருந்தார். அவர் ஏற்கனவே ஒரு சிக்ஸ் அடித்து இருந்ததால் மீண்டும் சிக்ஸர்களை அடிப்பாரா என்று எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், க்ருனால் பாண்டியா வீசிய ஐந்தாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் எந்த ரன்னும் எடுக்கப்படவில்லை. இதை அடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது.
க்ருனால் பாண்டியா கடைசி ஓவரில் மட்டும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், தனது ஓவரில் ஹர்திக் பாண்டியா அடித்த சிக்ஸர்களுக்கு பழி தீர்த்தார்.