சென்னை: ஆர்சிபி அணி இந்திய அணியின் இளம் வீரரான ரஜத் பட்டிதரை விடக் கூடாது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார். மெகா ஏலத்தில் இந்திய மிடில் ஆர்டரில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறியுள்ள அஸ்வின், ரஜத் பட்டிதரை ரிடெய்ன் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு பிசிசிஐ தரப்பில் ரிடென்ஷன் பாலிசியை வெளியிட்டதோடு, அக்.31ஆம் தேதிக்குள் தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் ரிடென்ஷன் பட்டியலை தீவிரமாக தயாரித்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு அணிகளும் வீரர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன.

இம்முறை ஒவ்வொரு அணிக்கும் பிசிசிஐ தான் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. அதாவது 6 வீரர்களை ரிடெய்ன் செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தாலும், அவர்களுக்கான ஊதியமாக ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி, ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்-கேப்ட் வீரர்களுக்கு ரூ.4 கோடி ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் 10 அணிகளும் ரிடென்ஷனை முழுமையாக பயன்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து குழம்பியுள்ளனர். ஏனென்றால் 5 ரிடென்ஷனை பயன்படுத்தினால் கூட, ரூ.75 கோடியை இழக்க நேரிடும். இதனால் எந்தெந்த அணி தரப்பில் யார் யாரை தக்க வைக்க வேண்டும் என்பது குறித்து ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இந்த விவாதத்தில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்றுள்ளார்.
அந்த வகையில் ஆர்சிபி அணி பற்றிய விவாதத்தில் அனலிஸ்ட் பிரசன்னா பேசுகையில், ஆர்சிபி அணியை பொறுத்தவரை முதல் வீரராக ரூ.18 கோடிக்கு விராட் கோலியை தக்க வைத்துவிடுவேன். மற்றபடி ரூ.4 கோடிக்கு யாஷ் தயாளை தக்க வைத்து கொள்வேன் என்று தெரிவித்தார். இதனால் அஸ்வின் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது அஸ்வின் பேசுகையில், ஆர்சிபி அணி கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. இதனால் ஆர்சிபி அணி பெரிய மாற்றங்களை செய்ய தேவையில்லை என்று கருதுகிறேன். தினேஷ் கார்த்திக் பயிற்சியாளராக மாறியுள்ளதால், அவருக்கான மாற்று வீரரை மட்டும் வாங்க வேண்டும்.
மற்றபடி முகமது சிராஜ், ரஜத் பட்டிதர், கேமரூன் க்ரீன், வில் ஜாக்ஸ் உள்ளிட்டோரை வாங்க முயற்சிக்கலாம். அதேபோல் ரஜத் பட்டிதர் தாராளமான ரூ.10 கோடிக்கு மேல் செல்வார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடிய இந்திய வீரர்கள் குறைவாகவே மெகா ஏலத்திற்கு வருவார்கள். கேஎல் ராகுல், துருவ் ஜுரெல், ரஜத் பட்டிதர், ராகுல் த்ரிப்பாட்டி, சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
இதனால் ஆர்சிபி அணி ரஜத் பட்டிதரை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி ரிஸ்க் எடுக்குமா என்பது தெரியவில்லை. ஏனென்றால் முகமது சிராஜ், ரஜத் பட்டிதர், கேமரூன் க்ரீன், வில் ஜாக்ஸ், டூ பிளசிஸ் மற்றும் ஸ்பின்னர்களை வாங்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி எப்படி செயல்படும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.