மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் கடைசி லீக் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ஆர்சிபி அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பல பரிசை நடத்துகிறது. லக்னோ அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை தவறவிட்ட நிலையில் ஆர்சிபி அணிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.
இந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபயர் ஒன்று போட்டியில் விளையாடலாம். இல்லையென்றால் எலிமினேட்டரில் மும்பை அணியுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்படும். இந்த சூழலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா, நாங்கள் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்கின்றோம். ஆடுகளம் ஒரு நல்ல விக்கெட்டாக தெரிகிறது. இதை பயன்படுத்திக் கொண்டு நாங்கள் சேஸ் செய்ய விரும்புகிறோம்.
ரஜத் பட்டிதார் எங்கள் அணியின் இம்பேக்ட் வீரராக களம் இறங்குவார். இந்த போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடத்தை பிடிக்க நாங்கள் முயற்சி செய்கின்றோம். டிம் டேவிட் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக லிவிங்ஸ்டோன் களமிறங்குகிறார்.
இதேபோன்று துசாராவுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறோம். லுங்கி நிகிடி அணியில் இல்லை என்று ஜித்தேஷ் சர்மா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவோ, பந்து வீசவோ எந்த ஒரு கவலையும் படவில்லை. கடந்த போட்டியில் எங்கள் அணி எவ்வளவு திறமை வாய்ந்த வீரர்கள் உடைய அணி என்பதை காட்டினோம்.
ஆனால் ஒவ்வொரு போட்டியிலுமே கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது. கடைசி பந்து வீசும் வரை ஒவ்வொரு வீரர்களும் 100 சதவீத பங்களிப்பையும் கொடுப்போம். எங்கள் அணியில் விக்னேஷ் ரதி திரும்பி இருக்கிறார் என்று ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.