பெங்களூர் : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்பட போகிறார்கள் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. ஆர் சி பி அணியின் கேப்டனாக இருந்த டுபிளசிஸ், டெல்லி அணிக்கு சென்று விட்டார். இதனால் புதிய கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ஆர் சி பி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த சூழலில் தான் பார்டர் கவாஸ்கர் தொடரில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்ட போது விராட் கோலி கேப்டனாக களத்தில் செயல்பட்டார். இதன் காரணமாக விராட் கோலிக்கு கேப்டன் வேட்கை இன்னும் இருக்கிறது என்றும், ஆர்சிபி அணியின் கேப்டனாக அவர் கம் பேக் கொடுப்பார் என்றும் ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.

இந்த நிலையில் ஆர்சிபி அணி புதிய கேப்டனாக ரஜத் பட்டிதாரை அறிவித்திருக்கிறது. இது ஆர்சிபி ரசிகர்களை சோகமடைய செய்திருக்கிறது. விராட் கோலி இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்ததால் தான்,இந்த முடிவை ஆர் சி பி அணி எடுத்திருப்பதாக தெரிகிறது. 2013 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை விராட் கோலி ஆர் சி பி அணியின் கேப்டனாக இருந்தார்.
இதில் ஆர் சி பி அணி 2016 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. இந்த சூழலில் ரஜத் பட்டிதார், மத்திய பிரதேச அணி கேப்டனாக சையது முஸ்தாக் அலி தொடரில் செயல்பட்டு இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த தொடரில் இறுதிப்போட்டி வரை அணியை கொண்டு சென்றிருக்கிறார்.
இதேபோன்று விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் ரஜத் பட்டிதார் கேப்டனாக இருந்திருக்கிறார். இதனால் கேப்டன் பணி என்பது ரஜத் பட்டிதாருக்கு புதியது கிடையாது. இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு விராட் கோலி வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து ரசிகர்களிடம் கோரிக்கை ஒன்றையும் விராட் கோலி வைத்து இருக்கிறார்.
அதில் ஆர்சிபி அணி ரசிகர்கள் தற்போது ரஜத் பட்டிதாருக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் கொடுக்க வேண்டும். இந்த நிலைமைக்கு வர அவர் கடுமையாக உழைத்திருக்கிறார் எனவே ரஜத் பட்டிதாரையும் ஆர்சிபி யையும் ஒரு குடும்பம் போல் நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோலி வலியுறுத்தியுள்ளார்.