சந்திகார்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு ஆர் சி பி அணி நான்காவது முறையாக தகுதி பெற்று அசத்தியிருக்கிறது. இதன் மூலம் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ஆர் சி பி அணிக்கு தற்போது நான்காவது முறையாக அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சந்திகாரில் நடைபெற்ற முதல் குவாலிஃபயர் போட்டியில் பஞ்சாப் அணியுடன் ஆர்சிபி அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுஆர்சிபி அணியில் காயம் காரணமாக இடம்பெறாத ஹேசல்வுட் தற்போது அணிக்கு திரும்பிருக்கிறார்.

பஞ்சாப் அணியின் மிகப்பெரிய பலமே அந்த அணியின் தொடக்க வீரர்கள் தான். இந்த சீசனில் பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப்சிம்ரன் சிங்கும் நன்றாக அடித்து விளையாடிய போதெல்லாம் பஞ்சாப் அணி வெற்றியை பெற்று இருக்கிறது. இந்த சூழலில் இந்த இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய ஆர்சிபி அணி அதனை சிறப்பாக செய்து முடித்தது.
இளம் வீரர் பிரியான்ஸ் ஆர்யாவின் விக்கெட்டை யாஷ் தயால் வீழ்த்த அனுபவ வீரர் புவனேஸ்வர் குமார், பிராப்சிம்ரன் சிங் விக்கெட்டை 18 ரன்களில் வீழ்த்தினார். இந்த சூழலில் பெரிதும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் பட்டையை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் தன்னுடைய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி பஞ்சாப் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
ஹேசல்வுட் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களில் ஆட்டம் இழக்க, அதிரடி வீரர் ஜோஸ் இங்கிலீஷ் 4 ரன்களில் வெளியேறினார். இதேபோன்று பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான நேகல் வதேரா 8 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக பஞ்சாப் அணி முதல் பவர் பிளே முடிவில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனை அடுத்து களத்திற்கு வந்த மார்க்க ஸ்டோனிஸ் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் எடுத்தார். 17 பந்துகளை எதிர்கொண்ட அவர் 26 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதேபோன்று இம்பேக்ட் வீரராக களமிறங்கிய முசிர் கான் டக் அவுட் ஆகி பஞ்சாப் ரசிகர்களை வெறுப்படைய செய்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷசாங் சிங் 3 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மதுல்லா உமர் சாய் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க ஹர்பிரித் பிரார் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார் இதன் மூலம் பஞ்சாப் அணி 14.1 ஓவரில் பெரும் 101 ரன்களை மட்டுமே எடுத்தது ஆர்சிபி பந்துவீச்சு தரப்பில் ஹேசந்வுட் மற்றும் சுயஷ் ஷர்மா தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.102 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் ஆர் சி பி அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்களுக்கு அவர் ஏமாற்றத்தை அளித்தார். ஒருமுனையில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க ,விராட் கோலி 12 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இந்த நிலையில் பில் சால்ட் மட்டும் பௌண்டரி, சிக்சர் என விளாசினார். 6 பவுண்டரி, மூன்று சிக்ஸர் என 27 பந்துகளில் அவர் 56 ரன்கள் குவித்தார். கடைசி வரை பில் சால்ட் ஆட்டம் இழக்காமல் நிற்க மாயங் அகர்வால் 19 ரன்களில் வெளியேறினார்.கேப்டன் ரஜத் பட்டிதார் 8 பந்துகளில் 15 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 10 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக இறுதிச்சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்று இருக்கிறது. இதேபோன்று 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது. ஐபிஎல் பிளே ஆப் வரலாற்றில் அதிக பந்துகள் எஞ்சிய நிலையில் ஆர்சிபி அணி வெற்றியை பெற்று இருக்கிறது. தற்போது தோல்வியை தழுவி இருக்கும் பஞ்சாப் அணிக்கு குவாலிபையர் 2வில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.