பெங்களூர் : ஐபிஎல் தொடர் வரலாற்றிலே சிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்ததாக அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணி என்றால் அது ஆர் சி பி தான் இதற்கு காரணம் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் ஆன விராட் கோலி கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் இருந்து தற்போது வரை ஆர் சி பி அணியில் தான் தொடர்கிறார்.
இதனால் விராட் கோலியின் ரசிகர்கள் அனைவருமே ஆர் சி பி யின் தீவிர விசிறிகளாக இருக்கிறார்கள். ஆர் சி பி அணியில் திறமைக்கு பஞ்சமே கிடையாது.டி 20 கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கருதப்படும் கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், மேக்ஸ்வெல் கே எல் ராகுல், வாட்சன் போன்ற வீரர்கள் எல்லாம் ஆர் சி பி அணியின் கடந்த காலங்களில் விளையாடியிருக்கிறார்கள்.

இவ்வளவு ஸ்டார் வீரர்கள் இருந்தும் ஆர்சிபி அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. இந்த சூழலில் வரும் மெகா ஏலத்திலாவது rcb அணி நல்ல அணியை தக்க வைத்துக்கொண்டு கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் தான் மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது.
அதன்படி ஆறு வீரர்கள் இந்திய வீரர்களாகவும் இருக்கலாம் அல்லது வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். ஆறு வீரர்களை தக்க வைக்காமல், அனைவரையும் ரிலீஸ் செய்யும் அணி ஏலத்தின் போது ஆறு rtm கார்டை பயன்படுத்தி வீரர்களை வாங்கிக் கொள்ளலாம். ஆர் டி எம் கார்டு என்றால் உதாரணத்திற்கு முகமது சிராஜை சிஎஸ்கேவும்,மும்பையும் போட்டி போடும் நேரத்தில் சிஎஸ்கே சிராஜ்க்கு 10 கோடி ரூபாய் தருவதாக கூறுகிறது.
அப்போது ஆர்சிபி அணி தங்கள் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்துவதாக கூறி சிராஜை வாங்கிக் கொள்ளலாம். இல்லை நாங்கள் ஏலத்திற்கு முன்பே வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறோம் என்று கூறினால் ஒவ்வொரு வீரர்களுக்கும் என்ன சம்பளம் வழங்க வேண்டும் என்பதையும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. அதன்படி முதலாவதாக தக்கவைக்கப்படும் வீரருக்கு 18 கோடி ரூபாயும்,இரண்டாவது வீரருக்கு14 கோடி ரூபாயும், மூன்றாவது வீரருக்கு 11 கோடி ரூபாயும், நான்காவது வீரருக்கு 18 கோடி ரூபாயும்,ஐந்தாவது வீரருக்கு 14 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.
அது மட்டும் அல்லாமல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக நான்கு கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டும்.இந்த சூழலில் ஏலத்திற்கு முன்பே ஐந்து வீரர்களை தக்க வைத்துக் கொண்டால் ஏலத்தின் போது கையிறுப்புத்தொகை மிகவும் குறைவாக இருக்கும். இதனால் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சமாக முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்றவர்களை ஆர் டி எம் கார்டு மூலம் எடுப்பது சரியாக இருக்கும்.
அந்த வகையில் ஆர்சிபி அணியின் எந்தெந்த வீரர்கள் தற்போது தக்க வைக்கப்படுவார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். ஆர்சிபி அணியில் மிகவும் முக்கியமான வீரர் என்றால் அது விராட் கோலி தான். இதனால் விராட் கோலியை 18 கோடி ரூபாய் ஆர் சி பி தக்க வைத்துக் கொள்ளும். இதன் பிறகு யாரை தக்க வைப்பது என்பதுதான் ஆர்சிபி அணிக்கு பெரிய தலைவலியாக இருக்கிறது.
ஏனென்றால் அந்த அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருமே ஏலத்திற்கு சென்றால் கூட மிகப் பெரிய விலைக்கு போக மாட்டார்கள். இதனால் ஏலத்தில் விடுவித்துவிட்டு ஆர் டி எம் கார்டு மூலம் குறைந்த விலைக்கு அவர்களை எடுத்துக் கொள்ளலாமா? இல்லை ஏலத்திற்கு முன்பே தக்க வைத்துக் கொள்ளலாமா என்ற குழப்பம் ஆர்சிபி அணிக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஆர் சி பி அணி இரண்டாவது வீரராக முகமது சிராஜை தான் தேர்வு செய்யும். ஆர் சி பி அணியின் சிறந்த பௌலராக விளங்கும் முகமது சிராஜ் இரண்டாவது வீரராக தக்கவைக்கப்பட்டால் அவருக்கு 14 கோடி ரூபாய் கிடைக்கும்.
இதேபோன்று ஆர் சி பி அணியில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் வீரர் என்றால் அது ஆஸ்திரேலிய வீரர் கேமரான் கிரீம் தான். அவருக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் தற்போது வழங்கப்படுகிறது. எனினும் 18 கோடி ரூபாய் கொடுக்கும் அளவிற்கு அவர் பெரிய தாக்கத்தை ஆர் சி பி அணியில் ஏற்படுத்தவில்லை. எனினும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நன்றாக செயல்படுவதால் அவரை மூன்றாவது வீரராக 11 கோடி ரூபாய் கொடுத்து ஆர் சி பி எடுக்கலாம்.
ஆர் சி பி அணியின் கேப்டனான டூப்ளிசிஸ் 7 கோடி ரூபாய் சம்பளத்தில் தான் தற்போது விளையாடுகிறார். ஆனால் அவருடைய வயது 40 ஐ தாண்டி விட்டது. வயதாகி விட்டதால் ஆர் சி பி அணி டுபிளசிஸ்க்கு பதிலாக புதிய கேப்டனை தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கரீபியன் பிரீமியர் லீக்கில் டுபிளசிஸ் தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதில் டுபிளசிஸ் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவரை மேலும் ஒரு சீசனில் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் ஆர்சிபி இருக்கிறது. எனினும் நான்காவது வீரராக தக்க வைத்துக் கொண்டால் அவருக்கு 18 கோடி ரூபாய் சம்பளம் கிடைக்கும். எனினும் அது மிகவும் கூடுதலான சம்பளம் என்பதால் ஆர் டி எம் கார்டு மூலம் டுபிளசிசை ஆர் சி பி எடுத்துக் கொள்ளலாம். ஐந்தாவது வீரர் என்றால் இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ். அதிரடியாக விளையாடக்கூடிய பேட்ஸ்மேன் ஆக வில்ஜாக்ஸ் இருக்கிறார். இதனால் ஆர்.சி.பி அணி அவரை ஐந்தாவது வீரராக தேர்வு செய்யும்.எனினும் அவருக்கு 14 கோடி ரூபாய் என்பது அதிகம் என்பதால் rtm கார்டு பயன்படுத்தி rcb ஏலத்தில் எடுக்கலாம்.
ஆர் சி பி அணியில் இருந்த தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றிருப்பதால் அவருக்கு பதில் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய வேண்டும். இதனால் ஆர்டிஎம் கார்டு மூலம் அனுஜ் ராவத் என்ற அதிரடி இளம் வீரரை ஆர் சி பி தேர்வு செய்யலாம். இல்லையென்றால் அவரை வெறும் நான்கு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொள்ளலாம். இதேபோன்று ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருக்கும் மேக்ஸ்வெல், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் அவரை மீண்டும் ஏலத்தில் எடுப்பது சரியாக இருக்காது.
பெங்களூர் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். இதனால் நல்ல வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டிய சூழலில் ஆர் சி பி இருக்கிறது. பேட்டிங்கிலும் விராட் கோலியை தவிர மற்ற எந்த வீரர்களும் நம்பிக்கையை தரவில்லை.இதனால் ஏலத்தில் ஆர் சி பி அணி அதிக தொகையை வைத்துக்கொண்டு நல்ல வீரர்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற ஐடியாவில் இருக்கிறது.