பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு ஏலத்தில் ஒரு வீரருக்கு பெரிய தொகையை கொடுக்காமல் சிறப்பாக செயல்பட்டதே காரணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பண்ட்க்கு 27 கோடி ரூபாயும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு 26 கோடியே 75 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
மூன்றாவது அதிக விலைக்கு சென்ற வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் இருந்தார். வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. இதில் ஸ்ரேயாஸ் தவிர மற்ற இரண்டு வீரர்களும் மிகவும் மோசமாக செயல்பட்டனர்.

குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் நடப்பு சீசனில் 11 இன்னிங்ஸ் விளையாடி வெறும் 142 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார். இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் வெங்கடேஸ் ஐயரை வாங்குவதற்காக ஆர்சிபி அணி 23 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை ஏலம் கேட்டு முன் வந்ததாகவும், ஆனால் கொல்கத்தா அணி கூடுதலாக 25 லட்சம் ரூபாய் கொடுத்து வெங்கடேஷ் ஐயரை வாங்கியதாக அபினவ் முகுந்த் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் கடவுள் ஆர்சிபி அணியை காப்பாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வளவு பெரிய தொகையை ஒரு வீரருக்கு செலவு செய்ய இருந்த ஆர்சிபி அணி எஸ்கேப் ஆகி விட்டதாகவும், அந்த தொகையை ஆர்சிபி ஹேசல்வுட் மற்றும் பில் சால்ட் பயன்படுத்தியதாகவும் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ளார். ஹேசல்வுட்டுக்கு 12 அரை கோடி ரூபாயும், பில் சால்ட்டுக்கு 11 அரை கோடி வழங்க ஆர்சிபி அணியால் முடிந்ததை அபினவ் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த இரண்டு வீரர்களுமே ஆர்சிபி அணியில் இந்த வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.மேலும் தாம் ஆர்சிபி அணியின் ஜாம்பவானான ஏபி டிவில்லியர்ஸ் இடம் பேசும்போது, தம்மை ஆர்சிபி அணி அதிக விலைக்கு எடுத்து விட்டதாக நினைக்கிறேன் என்று டிவில்லியர்ஸ் கூறியதாக அபினவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்சிபி அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஏபிடி, தாம் அதிக விலைக்கு சென்றதாக கூறும் நிலையில் மற்ற வீரர்கள் எல்லாம் தங்கள் நிலையை உணர வேண்டும் என்றும் அபினவ் முகுந்த் கூறியுள்ளார். ஒரு வீரருக்கு அதிக பணம் கொடுக்க முன்வந்த ஆர்சிபி அணி அவர் கிடைக்காததால், ஜித்தேஷ் சர்மா, பில் சால்ட் ஹேசல்வுட் போன்ற வீரரை வாங்கியதாகவும் இரண்டாவது நாள் ஏலத்தின் போது புவனேஸ்வர் குமாருக்காக பணத்தை ஆர்சிபி பயன்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார்.