பெங்களூர்: ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்பாக ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி, இளம் வீரரான ரஜத் பட்டிதர் மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் 3 வீரர்களையும் தக்க வைக்க முடிவு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு நாளை மாலை வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை நாளை 10 அணிகளின் நிர்வாகங்கள் வெளியிடவுள்ளன. இதனிடையே ஆர்சிபி அணி தரப்பில் 3 வீரர்களை மட்டும் தக்க வைக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த மெகா ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகிய மூவரும் தக்க வைக்கப்பட்டனர்.

இம்முறை ரீடெய்ன் செய்யும் வீரர்களுக்கான ஊதியம் ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அன்-கேப்ட் வீரர்களை தக்க வைக்க ரூ.4 கோடி வரை ஊதியம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6 வீரர்களை ஒவ்வொரு அணியும் ரீடெய்ன் செய்யலாம் என்பதால், ஆர்சிபி அணியின் ரீடென்ஷன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அந்த வகையில் வழக்கம் போல் ஆர்சிபி அணியின் முதல் ரீடென்ஷனாக விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் கடந்த சீசனில் மிகச்சிறப்பாக விளையாடிய இளம் வீரரான ரஜத் பட்டிதரையும் தக்க வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக இளம் வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாளை அன்-கேப்ட் வீரராக ரூ.4 கோடிக்கு தக்க வைக்கப்படவுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மாலை வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ், வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்த அந்த அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
கேமரூன் க்ரீனை தக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும், காயம் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது. ஏனென்றால் கேமரூன் க்ரீன் எப்போது கிரிக்கெட் களம் திரும்புவார் என்பது தெரியவில்லை. அதேபோல் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ் உள்ளிட்டோரை ரிலீஸ் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.