அகமதாபாத்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி இறுதிப் போட்டியில் கோப்பையை வென்றது என்றால், அதற்கு முழு காரணம் குர்னல் பாண்டியா தான். பஞ்சாப் அணிக்கு எதிரான பைனலில் ஆர்சிபி வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் வென்றது. இதில், குர்னல் மட்டும் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
குர்னல் மட்டும் ஒரு சிக்சரை கூடுதலாக தனது பந்துவீச்சில் கொடுத்து இருந்தால், இந்நேரம் பஞ்சாப் அணி கோப்பையை வென்று இருக்கும். இதனால், இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக குர்னல் பாண்டியாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2 இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை குர்னல் பாண்டியா படைத்தார். இது குறித்து பேசிய குர்னல், முதல் இன்னிங்ஸில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது, நான் வெளியே அமர்ந்து பேட்ஸ்மேன்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது, பந்து வீச்சு மெதுவாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என உணர்ந்தேன். ஆனால், இந்த ஃபார்மட்டில் ஒரு பந்து வீச்சாளராக, மிகவும் தைரியம் தேவைப்படுகிறது, ஏனெனில் பிழைக்கு இடமளவு மிகக் குறைவு. நான் என்னை நம்பினேன், மெதுவாகவும், வேகத்தை மாற்றியும் பந்து வீசினால், வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று நினைத்தேன்.
வெறுமனே வேகமாக வீசுவதற்கு பதிலாக., வேகத்தை குறைத்து வித்தியாசப்படுத்தினேன். எனது மிகப்பெரிய பலம், சூழ்நிலைக்கு ஏற்ப என்ன தேவை என்பதை கற்றுக்கொள்வது. நான் எப்போதும் என் உள்ளுணர்வையும் தைரியத்தையும் நம்பியிருக்கிறேன். இன்றும், இரண்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டுமெனில், தைரியமாக இருக்க வேண்டும் என உணர்ந்தேன்.
இந்த மைதானத்தில் வேகமாக பந்து வீசியிருந்தால், அது ஒரு நல்ல பேட்டிங் மைதானமாக இருந்திருக்கும். ஆனால், வேகத்தை மாற்றி வீசியதால், சிறிது உதவி கிடைத்தது. முதல் இன்னிங்ஸை விட இரண்டாவது இன்னிங்ஸில் மைதானம் இன்னும் சிறப்பாக மாறியது. நான் RCB-யில் இணைந்தபோது, கோப்பைகளை வெல்லபோவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருந்தேன்.
மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, முதல் நாளில் சொன்னதை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி. கடந்த 10 ஆண்டுகளில் 4 ஐபிஎல் கோப்பைகள் வென்றுள்ளேன். இது மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஹர்திக்கிடம் தொலைபேசியில் சொன்னேன், 10 ஆண்டுகளில் பாண்டியா குடும்பத்தில் 9 ஐபிஎல் கோப்பைகள் இருக்கும் என்றேன் என குர்னல் கூறினார்.