பெங்களூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணி தங்களது சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. ராஜஸ்தான் அணி மீண்டும் வெற்றியின் அருகே வந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்களே தங்களுடைய வெற்றியை ஆர்சிபி அணிக்கு பரிசாக வழங்கியிருக்கிறார்கள்.
பெங்களூரில் நடைபெற்ற 42வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் 23 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.

எனினும் விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் அதிரடியை காட்டினார். எட்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 42 பந்துகளில் அவர் 70 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 166 என்று அளவில் இருந்தது. இதேபோன்று டேவிட் படிக்கல் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர் 4 பவுண்டரிகள் அடங்கும்.
டிம் டேவிட் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க ஜிதேஷ் சர்மா இறுதியில் 10 பந்தில் 20 ரன்கள் சேத்தார். இதன் மூலம் ஆர் சி பி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக களமிறங்கிய 14 வயதான வைபவ் சூர்யவன்சி இன்று அதிரடியாக ஆடி இரண்டு சிக்ஸர்கள் விளாசி 12 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார். எனினும் ஜெய்ஸ்வால் தன்னுடைய வழக்கமான ஆக்ரோஷமான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். மூன்று சிக்ஸர், 7 பவுண்டர் என 19 பந்துகளில் அவர் 49 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று நித்திஷ் ரானா 28 ரன்களும், கேப்டன் ரியான் பராக் பத்து பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆனால் ராஜஸ்தான் அணியில் இடம் பெற்றிருந்த சிம்ரன் ஹெட்மயர் முக்கியமான கட்டத்தில் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த தருணத்தில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 18 வது ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டர்களை விட்டுக் கொடுத்தார்.
ஜூரல் மற்றும் சுபம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாடி 18 வது ஓவரில் மட்டும் 22 ரன்கள் விளாசினர். இதனால் போட்டி தலைக்கீழ் மாறியது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இரண்டு ஓவருக்கு 18 ரன்கள் தான் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் அபாரமாக செயல்பட்டார்.
அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், வெறும் 1 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் 17 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியால் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. இதன் மூலம் ஆர் சி பி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணி சொந்த மண்ணில் பெரும் முதல் வெற்றி இதுவாகும். இதன் மூலம் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் பின்னுக்கு தள்ளி ஆர் சி பி அணி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது.