பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு பெங்களூரில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் அவரை நேரில் வந்து வரவேற்றார். அவர் கைகளில் கர்நாடகா கொடியை அளித்தார்.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதை அடுத்து அகமதாபாத்திலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் பெங்களூருக்கு விரைந்தனர். விராட் கோலி பெங்களூரு விமான நிலையத்தில் வந்து இறங்கிய நிலையில், அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

கர்நாடக அரசு சார்பில் துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் முன்நின்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வரவேற்றார். அப்போது அவர் கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ கொடியை விராட் கோலியின் கைகளில் அளித்து வரவேற்றார். விராட் கோலி தனது கைகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கொடியையும், கர்நாடக மாநிலத்தின் கொடியையும் ஒன்றாக ஏந்தி அசைத்தார். அது கன்னட மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் இது குறித்து சமூக வலைத்தளங்களில் உணர்ச்சிப் பெருக்கமிக்க கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகர் தினேஷ் கார்த்திக், அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார், க்ருணால் பாண்டியா ஆகியோருக்கும் டி.கே. சிவகுமார் முன்நின்று வரவேற்பு அளித்தார். பின்னர் அங்கிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் விதான சௌதாவை நோக்கிச் சென்றனர்.
பிற்பகல் 4.30 மணியளவில் விதான சௌதாவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வந்து சேர்ந்தார். அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்களை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
அதே சமயம், சின்னசாமி மைதானத்தின் வாயிலில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்தனர். அவர்களை சமாளிப்பது காவல் துறைக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி செல்லவிருந்த திறந்தவெளிப் பேருந்து ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விதான சௌதா முதல் சின்னசாமி மைதானம் வரை குறைந்த தூரம் தான் என்றாலும், அந்தச் சாலை போக்குவரத்து நெரிசல் மிக்கது என்பதோடு, அந்தச் சாலையில் வாகனத்தை நிறுத்தும் வசதியும் அதிகம் இல்லை என்பதால், அங்கு திறந்தவெளி ஊர்வலம் நடத்தப் போவதில்லை என்ற முடிவை காவல்துறை எடுத்தது. அது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறது. மேலும், அந்தப் பகுதியில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் வேறு சாலைகளில் செல்லுமாறு காவல்துறை அறிவுறுத்தி இருக்கிறது.