பெங்களர் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், 10 நாட்கள் கழித்து தற்போது மீண்டும் தொடங்கியிருந்தது. இதில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகள் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் பலப் பரிட்சை நடத்தியது.
இந்த போட்டி ஆர் சி பி அணியை விட கொல்கத்தாவுக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. ஆர் சி பி அணியை பொறுத்தவரை இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு சென்றிருக்க முடியும். மேலும் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு ஆர் சி பி அணி, எஞ்சிய எம் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த தருணத்தில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால் அவரை வழி அனுப்புவதற்காக ஆர் சி பி ரசிகர்கள் பெரும் அளவில் முயற்சிகளை மேற்கொண்டனர். அனைவரும் வெள்ளை நிற ஜெர்சியுடன் வந்து விராட் கோலிக்கு பிரியாவிடை அளிக்க கூடியிருந்தனர்.
இந்த சூழலில் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று கனமழை மதியத்தில் இருந்து பெய்து வந்ததால் போட்டி நடைபெறுவது சந்தேகமாக இருந்தது. இந்த தருணத்தில் இரவு நேரத்திலும் மழை விடாத நிலையில் போட்டி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. டாஸ் கூட போட முடியாத நிலையில் இரவு 10: 24 மணிக்கு போட்டியை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இதனை அடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆர் சி பி அணி தற்போது 17 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. நடப்புச் சாம்பியன் ஆன கொல்கத்தா அணி 12 புள்ளிகள் பெற்று தற்போது தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது.
ஆர்சிபி அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த இரண்டிலும் அவர்கள் தோல்வியை தழுவினால், மற்ற அணிகளின் தயவு இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். மேலும் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பதற்கு ஆர் சி பி அணி கடைசியாக உள்ள இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. 10 நாட்களுக்குப் பிறகு போட்டி மீண்டும் தொடங்க இருந்த நிலையில் மழை விளையாடிவிட்டது.