முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் சரணடைந்தது. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 2 ரன்கள் எடுத்த நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டி20 போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட் என்ற பெயரை கேட்டாலே ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்து விடுவார் என சொல்லும் அளவுக்கு ஒரு புள்ளி விவரமும் வெளியாகி உள்ளது. அதன்படியே இந்த முக்கியமான போட்டியிலும் ஸ்ரேயாஸ் ஐயர் ஹேசில்வுட்டிடம் விக்கெட்டை இழந்தார்.

அது மட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமான முல்லான்பூரில் மிக மோசமாகவே ஆடியிருக்கிறார். இதுவரை நடந்த லீக் போட்டிகளிலும் அங்கு அவர் சொதப்பியிருந்தார். தற்போது முக்கியமான பிளே ஆஃப் போட்டியிலும் சொதப்பி இருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு முல்லான்பூரில் நடந்த போட்டிகளில் 10, 9, 0, 6 மற்றும் 2 ரன்களை எடுத்துள்ளார். மேலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக இந்த ஆண்டு ஆடிய 3 போட்டிகளிலும் 7 ரன்கள், 6 ரன்கள் மற்றும் 2 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மேலும், டி20 போட்டிகளில் ஜோஷ் ஹேசில்வுட்டின் பந்துவீச்சில் அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்று முறை விக்கெட்டை பறிகொடுத்து இருக்கிறார். அதிலும், 22 பந்துகளைச் சந்தித்து வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஜோஷ் ஹேசில்வுட்டுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயரால் விளையாட முடியாது என்ற புள்ளிவிவரம் மீண்டும் உறுதியாகி இருக்கிறது. அதிலும், பிளே ஆஃப் போன்ற முக்கியமான போட்டியில் இந்த மோசமான விஷயம் அரங்கேறியிருக்கிறது. ஒட்டுமொத்த பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் சரணடைந்தது. 8.5 ஓவர்களில் வெறும் 7 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.