மும்பை: 2025 ஐபிஎல் தொடர் மீண்டும் துவங்க உள்ளதாக பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவை விட்டுத் தங்கள் நாட்டுக்குச் சென்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வருவது சந்தேகமாக மாறியுள்ளது.
ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்பவில்லை என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது ஐபிஎல் தொடரை விரைவில் துவக்குவதற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன. அந்த அணிகளில் இடம்பெற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும், அதனால் பெரிய இழப்பு எதுவும் ஏற்படாது.

ஆனால் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த அணிகளில் இடம்பெற்றிருக்கும் வெளிநாட்டு வீரர்கள் முழு அளவில் பங்கேற்கவில்லை என்றால், அது அந்த அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த அணிகளின் சமநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கும். எனவே இது குறித்து ஐபிஎல் நிர்வாகமும், அணி உரிமையாளர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, ஜூன் 11 அன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி அந்த இறுதிப் போட்டிக்காக குறைந்தது இரண்டு வாரங்களாவது பயிற்சியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், மே கடைசி வாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் அந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவார்கள். ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடைபெற்றிருந்தால், இந்தப் பயிற்சிக்கு எந்தச் சிக்கலும் வந்திருக்காது.
தற்போது ஒரு வார கால தாமதமாக ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால், நிச்சயமாக ஜூன் முதல் வாரம் வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டி வரும். ஆனால் அதற்கு முன்னரே ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவார்கள். அப்படி நடந்தால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
உதாரணத்திற்கு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெற்றிருக்கிறார். அவர் அந்த அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். ஒருவேளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய பிறகு, அவர் அந்த அணியில் இருந்து விலகினார் என்றால், அது அந்த அணியின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும்.
முதலில், ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை பிசிசிஐ எப்படி சமாளிக்கப் போகிறது என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.