மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கப் போகிறோம் என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். இதில் எதிர்பாராவிதமாக ஐந்து அணிகள் தங்கள் அணிகளின் கேப்டன்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளன.
அந்த ஐந்து அணிகளும் 2025 ஐபிஎல் தொடரில் புதிய கேப்டனுடன் பயணிக்க முடிவு செய்துள்ளன. எந்தெந்த அணிகள் தங்கள் அணிகளின் கேப்டன்களை வெளியேற்றி உள்ளன என்ற பட்டியலை பார்க்கலாம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்கள் அணியின் கேப்டன் ஃபாப் டூ பிளசிஸ்-ஐ அணியிலிருந்து நீக்கி இருக்கிறது. அவர் 42 வயதான வீரர் என்ற அடிப்படையில் அவரை நீக்கி இருக்கிறது.
அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டன் ஷிகர் தவானை விடுவித்து இருக்கிறது. அவர் முன்பே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. மாற்று கேப்டனாக இருந்த சாம் கர்ரனை பஞ்சாப் அணி தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரையும் அந்த அணி தக்க வைக்கவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் அணியில் மொத்தமே இரண்டு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். ஷஷான்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இதன் மூலம் பஞ்சாப் அணி புதிய கேப்டன் மற்றும் புதிய வீரர்களுடன் 2025 ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது.
அடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தங்கள் அணியின் கேப்டன் கே எல் ராகுலை விடுவித்து இருக்கிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரனை அந்த அணி கேப்டனாக நியமிக்க உள்ளது.
அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி யாரும் எதிர்பாராத வகையில் தங்கள் அணிக்கு ஐபிஎல் கோப்பை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கி உள்ளது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணி தங்கள் அணியின் நட்சத்திர வீரரும், கேப்டனும் ஆன ரிஷப் பண்ட்டை நீக்கி இருக்கிறது. அவருக்கென இருக்கும் தனி ரசிகர் பட்டாளத்தையும் கருத்தில் கொள்ளாமல் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.