மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான மெகா ஏலம் வரும் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் மாற்றப்படுவார்கள் என தெரிகிறது.
இதன் காரணமாக புத்தம் புதிய அணி களமிறங்க வாய்ப்பு இருக்கும். எனினும் இதற்கு பல்வேறு அணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வீரர்களை முற்றிலும் மாற்றுவது என்பது தேவையில்லாத காரியம் என்று பல்வேறு அணிகளும் விமர்சித்து இருக்கிறார்கள்.

தாங்கள் கடின முயற்சிக்குப் பிறகு ஒரு அணியை தயார் செய்வதாகவும், அந்த அணி சரியாக விளையாடுவதற்கு முன்பே மீண்டும் பிசிசிஐ மெகா ஏலத்தை நடத்தி அதை கலைத்து விடுவதாகவும் முன்னணி அணியினர் குற்றச்சாட்டு இருக்கின்றது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எல்லாம் வீரர்களை சரியாக தேர்வு செய்து கட்டமைப்பாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் மெகா ஏலத்தை நடத்தி அதனை பிசிசிஐ யை உடைப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மெகா ஏலத்திற்கு மூன்று வீரர்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற விதி கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் போர் கொடி தூக்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் ஒரு அணி எட்டு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
இதே போன்று பல அணிகள் பிசிசிஐக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஐந்து முதல் ஏழு வீரர்களை தக்க வைக்கும் வாய்ப்பை பிசிசிஐ உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதேபோன்று ரைட் டூ மேட்ச் கார்டு என்று விதியை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று ஐபிஎல் அணிகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணியில் ஏற்கனவே விளையாடிய வீரரை வேறு அணி ஏலத்தில் வாங்கினால் இந்த ரைட் டூ மேட்ச் கார்டை பயன்படுத்தி பழைய அணியெ மீண்டும் அந்த வீரரை வாங்கிக் கொள்ளலாம்.
இதேபோன்று வீரர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்க பெறும் வகையில் ஒவ்வொரு அணியும் செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள உச்சவரம்பை 100 கோடியில் இருந்து 110 அல்லது 120 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இதற்கான ஒட்டுமொத்த திட்டமும் அறிவிப்பும் ஜூலை இறுதியில் வெளிப்படுத்தப்படும் என தெரிகிறது.