மும்பை: பஞ்சாப் அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், சாம் கரண் மற்றும் லிவிங்ஸ்டன் உள்ளிட்ட அனைத்து சர்வதேச வீரர்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மீண்டும் அடிப்படையில் இருந்து ஒரு அணியை கட்டமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி, இதுவரை 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறை கூட பிளே ஆஃப் சுற்றுக்கு அருகில் கூட பஞ்சாப் அணி வரவில்லை. ஐபிஎல் வரலாற்றில் அதிக கேப்டன்கள், அதிக பயிற்சியாளர்களை நியமித்துள்ள ஒரே அணி பஞ்சாப் தான்.

மொத்தமாக 11 பயிற்சியாளர்கள், 16 கேப்டன்கள் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருக்கின்றனர். 17 சீசன்களாக ஐபிஎல் தொடரில் விளையாடிய போதும், இதுவரை அந்த அணியில் ஐகானிக் வீரர் என்ற யாரும் கிடையாது. சேவாக், முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின், பூரன், கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் என்று ஏராளமான நட்சத்திர வீரர்கள் விளையாடிய போது, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரீடெய்ன் செய்யவில்லை.
இந்த நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பஞ்சாப் அணியை நிச்சயம் பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை ரீடெய்ன் செய்யலாம் என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பஞ்சாப் அணியில் நட்சத்திர வீரர்களாக அர்ஷ்தீப் சிங், சாம் கரண், லியம் லிவிங்ஸ்டன், நேதன் எல்லிஸ், பேர்ஸ்டோவ், ரபாடா மற்றும் ராகுல் சஹர் ஆகியோர் இருக்கின்றனர். இதில் வெளிநாட்டு வீரர்களை ரீடெய்ன் செய்யாமல் மெகா ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி எளிதாக வாங்க முடியும். ஆனால் இந்திய வீரர்கள் மெகா ஏலத்தில் அதிகளவிலான ஏலத்திற்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அர்ஷ்தீப் சிங் மற்றும் ராகுல் சஹர் ஆகியோரை தக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பார்க்கப்பட்டது. அதேபோல் அன்கேப்ட் வீரர்களான ஷஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை ரீடெய்ன் செய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணி எந்த வீரரையும் தக்க வைக்காமல் அனைவரையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ரூ.120 கோடி பர்ஸ் தொகையுடன், 6 ஆர்டிஎம் கார்டுகளும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கிடைக்கும். இதனால் அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹர், ஷஷாங்க் சிங் உள்ளிட்டோரை எளிதாக குறைந்த தொகைக்கு ஏலத்தில் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பஞ்சாப் அணியின் திட்டம் சரியாக இருந்தாலும், பிடிவாதமாக மெகா ஏலத்தில் செயல்பட்டு வீரர்களை வாங்குமா என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.