மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 17 ஐபிஎல் சீசன்களில் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணியின் 11வது பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்புக்கு வந்துள்ளார். இதனால் இதுவரை பஞ்சாப் பயிற்சியாளராக இருந்தவர்கள் யார் என்பது குறித்து பார்க்கலாம்.
கடந்த 2 ஆண்டுகளாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் பேலிஸ் பணியாற்றி வந்தார். இவரின் பயிற்சியின் கீழ் பஞ்சாப் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் வழக்கம் போல் பஞ்சாப் அணியின் நிர்வாகம் தரப்பில் புதிய பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி அணியின் பயிற்சியாளராக கடந்த 7 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ரிக்கி பாண்டிங் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன்பின் ரிக்கி பாண்டிங் எந்த அணியுடன் பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணி வரலாற்றில் எப்போதும் ஆஸ்திரேலியா வீரர்கள் மீது தனிப் பாசம் இருக்கும். பெய்லி, மேக்ஸ்வெல், ஜேம்ஸ் ஹோப்ஸ், ஜான்சன் என்று ஏராளமான வீரர்கள் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளனர். இம்முறை தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்திருப்பது அந்த அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அதேபோல் பஞ்சாப் அணி இதுவரை 17 சீசன்களில் விளையாடியுள்ள நிலையில், 2 முறை மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதில் 16 கேப்டன்கள் பஞ்சாப் அணிக்காக செயல்பட்டுள்ள நிலையில், மொத்தமாக 11 பயிற்சியாளர்கள் பணியாற்றியுள்ளனர். இதனால் ரிக்கி பாண்டிங்காவது பணியை சரியாக செய்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2008 முதல் 2010 சீசன் வரை பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக டாம் மூடி பணியாற்றினார். அதேபோல் 2011ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் பயிற்சியாளராகவும், 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமைப் பயிற்சியாளராகவும், 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் டேரன் லெஹ்மானும் செயல்பட்டுள்ளனர்.
பின்னர் 2014 முதல் 2016 வரை இந்தியாவின் சஞ்சய் பங்கர், 2017ஆம் ஆண்டு வீரேந்தர் சேவாக்கும் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டனர். தொடர்ந்து 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாட்ஜ், 2019ஆம் ஆண்டு மைக் ஹெசன், 2020 முதல் 2022 வரை இந்தியாவின் அனில் கும்ப்ளேவும் பயிற்சியாளராக செயல்பட்டார்.
தொடர்ந்து 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பேலிஸ் செயல்பட்டுள்ளார். இவர்களுக்கு பின் 11வது பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்புக்கு வந்துள்ளார். இதன் மூலமாக பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக வந்துள்ள 6வது ஆஸ்திரேலியர் என்ற பெருமையையும் ரிக்கி பாண்டிங் பெற்றுள்ளார். இதனால் ரிக்கி பாண்டிங் மூலமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் மாற்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 சீசன்களாக பஞ்சாப் அணியின் நிர்வாகத்தில் பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்கள் மீது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணியை பிராண்ட் அணியாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதால், இம்முறை அதனை சாத்தியப்படுத்த மெகா ஏலத்தை பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.