மும்பை: கேகேஆர் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள சூழலில், அவரின் இடத்திற்கு ரிக்கி பாண்டிங்கை கொண்டு வர ஷாருக் கான் பேசி வருவதாக கூறப்படுகிறது.
2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை கேகேஆர் அணி கைப்பற்றி சாதனை படைத்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார வெற்றிபெற்ற கேகேஆர் அணி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முக்கிய காரணமாக ஆலோசகர் கவுதம் கம்பீர் அமைந்தார். இதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை கம்பீர் ஏற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக கேகேஆர் அணியின் புதிய ஆலோசகராக யார் கொண்டு வரப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு பக்கம் ரீடென்ஷன் பாலிசி குறித்த விவாதங்கள் தீவிரமாக நடந்து வரும் சூழலில், பல்வேறு அணிகளும் பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக பணியாற்றி வருகிறது. அண்மையில் லக்னோ அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ராகுல் டிராவிட் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன்பின் உடனடியாக ராகுல் டிராவிட் ராஜஸ்தான் அணி நிர்வாகிகளுடன் பணிகளை தொடங்கினார். இன்னொரு பக்கம் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் தங்களின் பயிற்சியாளர்களை ஒப்பந்தம் செய்ய பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
டெல்லி அணி தரப்பில் இந்திய பயிற்சியாளர் ஒருவரை கொண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் 2 ஜாம்பவான்களை ஆலோசகர் பொறுப்புக்கு வர ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலில் முதலில் இருக்கும் பெயர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தான்.
2வது பெயராக தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக் காலிஸ் இருக்கிறார். இவர்கள் இருவரும் கேகேஆர் அணிக்காக விளையாடியவர்கள். ரிக்கி பாண்டிங் முதல் சீசனிலேயே கேகேஆர் அணிக்காக ஆடியிருந்தார். அதுமட்டுமல்லாமல் டெல்லி அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் ரிக்கி பாண்டிங் பேசுகையில், ஐபிஎல் தொடரில் மீண்டும் பணியாற்றுவதற்கான சில பேச்சுவார்த்தைகள் நடக்கிறது.
இன்னும் சில வாரங்களில் பேச்சுவார்த்தை முழுமையான முடிவை எட்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கேகேஆர் அணி நிர்வாகம் ரிக்கி பாண்டிங்கை ஒப்பந்தம் செய்யவே விரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் வெளிநாட்டு வீரர்களை பயிற்சியாளர் சந்திரகாண்ட் பண்டிங் கையாள்வதில் சில சிரமங்களை சந்தித்து வருகிறார்.
கடந்த சீசனிலும் கம்பீர் கம்பீர் வெளிநாட்டு வீரர்களை கையாண்டு வந்தார். இதனால் சந்திரகாண்ட் பண்டிட் உடன் ரிக்கி பாண்டிங்கை இணைந்து செயல்பட வைக்கலாம் என்று கேகேஆர் அணி நிர்வாகத்தின் விருப்பமாக உள்ளது. இதனால் விரைவில் கேகேஆர் அணி நிர்வாகம் ரிக்கி பாண்டிங்கை ஒப்பந்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.