மும்பை: டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் செயல்பட்ட போதே 3 முறை என்னை டிரேட் முறையில் வாங்குவதற்கு முயற்சித்த சம்பவம் குறித்து பஞ்சாப் அணியின் இளம் விக்கெட் கீப்பரான பிரப்சிம்ரன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவ.24 மற்றும் நவ.25 ஆகிய தேதிகளில் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இம்முறை மெகா ஏலத்தில் பஞ்சாப் அணி ரூ.110.5 கோடியுடன் பங்கேற்கவுள்ளது. அதேபோல் பஞ்சாப் அணி தரப்பில் 2 வீரர்கள் மட்டுமே ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சீசனில் சிறப்பாக ஆடிய ஷஷாங்க் சிங் ரூ.5.5 கோடிக்கும், பிரப்சிம்ரன் சிங் ரூ.4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலமாக 4 ஆர்டிஎம் வாய்ப்புகளையும் பஞ்சாப் அணி நிர்வாகம் கைகளில் வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணியின் புதிய பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். ஏற்கனவே மும்பை, டெல்லி உள்ளிட்ட அணிகளுடன் ரிக்கி பாண்டிங் பணியாற்றியவர் என்பதால், அவர் நிச்சயம் பஞ்சாப் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் 2 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருப்பதால், பஞ்சாப் அணியை புதிதாக கட்டமைக்கும் பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் அணியால் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ள பிரப்சிம்ரன் சிங் பேசுமையில், ரீடென்ஷன் தொடர்பாக என்னிடம் ரிக்கி பாண்டிங் பேசும் போதே மிகச்சிறந்த உரையாடல் எங்களுக்குள் நடைபெற்றது.
பஞ்சாப் அணியிடம் இருந்து டிரேட் முறையில் என்னை வாங்கி டெல்லி அணிக்காக விளையாட வைக்க 3 ஆண்டுகளாக ரிக்கி பாண்டிங் முயற்சித்ததை வெளிப்படையாக கூறினார். தற்போது என்னுடன் பணியாற்றப் போவதை நினைத்து ஆர்வமாக இருப்பதாக கூறினார். அது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங் செய்யாத சாதனைகளே கிடையாது.
அப்படியான ஜாம்பவான் ரிக்கி பாண்டிங். அதனால் அவருடன் பணியாற்றப் போவதை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். அதேபோல் பஞ்சாப் அணி நிர்வாகமும் என் மீது நம்பிக்கை வைத்து ரீடெய்ன் செய்துள்ளனர். அதனால் எத்தனை போட்டிகளில் முடியுமோ, அத்தனை போட்டிகளிலும் சிறந்த தொடக்கத்தை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
பஞ்சாப் அணியுடன் 2019ஆம் ஆண்டு முதல் பயணித்து வரும் பிரப்சிம்ரன் சிங், இம்முறை அட்டகாசமான ஃபார்மில் இருக்கிறார். ஏற்கனவே இந்தியா ஏ அணியில் இடம்பிடித்து அசத்திய பிரப்சிம்ரன் சிங், அடுத்தடுத்து நடக்கவுள்ள சையத் முஷ்டாக் அலி மற்றும் ஐபிஎல் தொடர்களில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.