டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜிம்ஆர் நிறுவனம் அவரை மாற்றி புதியவரை கேப்டனாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் தங்கள் அணியில் இடம் பெற மாட்டாரா? என சில ஐபிஎல் அணிகள் ஏங்கி வரும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை அணியை விட்டே நீக்க இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணி ஜே எஸ் டபிள்யூ (JSW) மற்றும் ஜி எம் ஆர் (GMR) ஆகிய இரண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நிறுவனங்களுக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சரி சமமாக 50 சதவீதம் உரிமை உள்ளது. இந்த இரண்டு அணிகளும் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் ஒரு முறை அணி நிர்வாகத்தை கைமாற்றிக் கொள்கின்றன.

அதன்படி 2025 மற்றும் 2026 ஐபிஎல் தொடர்களில் ஜி எம் ஆர் நிறுவனம் டெல்லி கேபிடல்ஸ் அணியை நிர்வகிக்க உள்ளது. அந்த அணி நிர்வாகத்தை கையில் எடுத்தவுடன் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கை நீக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த அணியின் இயக்குனரான முன்னாள் இந்திய அணி கேப்டன் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை நிர்வாகத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளது.
கங்குலி தற்காலிகமாக இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அணியின் முக்கிய நடவடிக்கைகளில் தலையிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏலத்தின் போது மட்டுமே கங்குலி பங்கேற்பார். ஜி எம் ஆர் நிறுவனம் கங்குலியுடனும் சேர்ந்து பயணிக்க விரும்பவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டையும் ஜி எம் ஆர் நிறுவனம் மாற்ற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. முற்றிலும் புதிய அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியை தயார் செய்ய ஜி எம் ஆர் விரும்புவதாக கூறப்படுகிறது. எனவே, ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டு ஏலத்தில் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது.
இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு வேளை ரிஷப் பண்ட் ஏலத்தில் பங்கேற்றால் அவருக்காக மற்ற 9 அணிகளும் போட்டி போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.