சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடக்கவுள்ளது. இம்முறை மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், சாஹல், அஸ்வின் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் எந்த வீரர் யாருக்கு செல்வார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.
இந்த விவாதத்திற்கு தீனி போடும் வகையில் இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னையில் தீவிர கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் தமிழக வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை வைத்து மாதிரி ஐபிஎல் ஏலத்தை நடத்தியுள்ளார். அதில் 20 நட்சத்திர வீரர்கள் எந்தெந்த அணிகளுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற வீடியோ வெளியாகியுள்ளது.

அதன்படி நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ரூ.20.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் அணியால் ரிலீஸ் செய்யப்பட்ட நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் ரூ.16 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். அதேபோல் ககிசோ ரபாடா ரூ.10 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் ரூ.18 கோடிக்கு டெல்லி அணியாலும் வாங்கப்பட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கிளென் மேக்ஸ்வெல் ரூ.9.5 கோடிக்கு பஞ்சாப் அணியாலும், தீபக் சஹர் ரூ.5.5 கோடிக்கு ஆர்சிபி அணியாலும், குஜராத் அணிக்காக ஆடி வந்த டேவிட் மில்லர் ரூ.8 கோடிக்கு லக்னோ அணியாலும் வாங்கப்பட்டார். அதேபோல் அர்ஷ்தீப் சிங்கை பஞ்சாப் அணியே ஆர்டிஎம் மூலமாக ரூ.13.5 கோடிக்கு வாங்கியது.
கேகேஆர் அணியால் விடுவிக்கப்பட்ட கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அதே அணி ரூ.9.5 கோடிக்கு வாங்கியது. அதேபோல் கடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க் இம்முறை ரூ.14 கோடிக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். அந்த அணியின் பேட்டிங் வலுவாக உள்ள நிலையில், வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளருக்கு அதிக தொகை கொடுத்திருக்கிறது.
இம்முறை ரவிச்சந்திரன் அஸ்வின் ரூ.8.5 கோடிக்கு சிஎஸ்கே அணியால் வாங்கப்பட்டார். நட்சத்திர ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ரூ.12 கோடிக்கு லக்னோ அணியால் ஆர்டிஎம் கார்டு மூலம் வாங்கப்பட்டார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ட்ரென்ட் போல்ட் ரூ.13.5 கோடிக்கு ஆர்சிபி அணியால் வாங்கப்பட, இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ரூ.12 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.