மும்பை: இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்காக பயிற்சி கொடுக்கும் ஸ்டைலையே மாற்றிக் கொண்டதாக முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்குள் அவர் வந்த போது புரிந்து கொள்ள சவாலான வீரராக இருந்ததாக கூறியுள்ள ஸ்ரீதர், அவரின் பின்னணி மற்றும் தேவையை அறிந்து பயிற்சி கொடுத்ததாக கூறியுள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. செப்.19ஆம் தேதி தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். ஏனென்றால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வு வழங்கியுள்ளது. இதனால் ஹோம் சீசன் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதேபோல் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்திவிட்டு வங்கதேச அணி வந்திருப்பதால், இந்திய அணியால் எளிதாக வெல்ல முடியாது என்று பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் கம்பேக் கொடுப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் களமிறங்கிவிட்டார்.
இதனால் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரிஷப் பண்ட் கால் பதிப்பார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்-க்கு பயிற்சியளித்த அனுபவம் குறித்து முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதில், எந்த விளையாட்டாக இருந்தாலும் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஒரே தத்துவம் தான் பின்பற்றப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால், உங்களின் கோச்சிங் ஸ்டைலில் வீரர்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர்கள் கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி கொடுங்கள் என்பது தான். சில நேரங்களில் நாம் வீரர்களுக்கு வார்த்தைகளாக சில விஷயங்கள் சொல்லி கொடுத்தால், அது நடந்துவிடும் என்று நினைப்போம். ஆனால் நாம் சொல்லும் விஷயங்கள் வீரர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, செயல்படுத்த முடியவில்லை என்றால், நமது பணி முழுமையாக முடியவில்லை என்பதே அர்த்தம்.
ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மாதிரி பயிற்சி முறைகளை பின்பற்ற வேண்டும். யு19 உலகக்கோப்பை முடிவடைந்த பின் ரிஷப் பண்ட் 20 வயதில் இந்திய அணிக்குள் வந்தார். அவர் இந்திய அணிக்கு வந்த பின், அவரை புரிந்து கொள்ளவே முடியவில்லை. அவருடன் பணியாற்றுவதே சவாலாக இருந்தது. ஏனென்றால் அவர் சில விஷயங்களை பின்பற்றி வந்தார். அதனால் அவர் மீது நம்பிக்கை வருவதற்கு சில நாட்கள் பிடித்தது.
அவருக்காக எனது கோச்சிங் ஸ்டைலையே மாற்றினேன். அவர் எங்கு இருந்து வருகிறார், அவருக்கு என்ன தேவை என்பதை புரிந்து பயிற்சி அளித்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் நீண்ட நாட்களாக ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஸ்ரீதர், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் முன்னேற்றம் அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. என்சிஏ, இந்தியா ஏ, இந்திய அணி என்று ஸ்ரீதர் தொடர்ந்து ரிஷப் பண்ட் உடன் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி உள்ளார்.