மும்பை: ஐபிஎல் 2025 சீசனில் புதிய கேப்டன், புதிய மெண்டர் உடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, இம்முறை சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெரும் ஏமாற்றத்தை சந்தித்தது. இந்த நிலையில், தங்களுடைய கடைசி லீக் போட்டியில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியுடன் சீசனை முடித்துக்கொள்ளவுள்ளது.
விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான பண்ட், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் எல்எஸ்ஜி நிர்வாகத்தால் 27 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார், இது ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையை அவருக்கு வழங்கியது. பின்னர் அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருப்பினும், ஐபிஎல் 2025-ல் அவரது பேட்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது.

மேலும் அவரது கேப்டன்ஷிப்பும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இது குறித்து பேசிய ஆகாஷ் தீப்,"பாருங்கள், கிரிக்கெட்டில் டைமிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்று என்று நான் நினைக்கிறேன். இது அழுத்தம் பற்றியது அல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் ரிஷப் நிறைய கிரிக்கெட் விளையாடியவர். மிக உயர்ந்த மட்டத்திலும் விளையாடியுள்ளார்.
மேலும் அவர் சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார். வாழ்க்கையில் இவ்வளவு சாதித்த ஒரு விளையாட்டு வீரருக்கு அழுத்தத்தை எப்படி கையாள்வது என்று தெரியும். எனவே, அழுத்தமே காரணம் என்று நான் நினைக்கவில்லை. இது டைமிங் பற்றியது.சில சமயங்களில் நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்கள், ஆனால் அது நடக்காது. ரிஷப் தற்போது அப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் இருக்கிறார் என்று நான் உணர்கிறேன்," என்று ஆகாஷ் கூறினார்.
ரிஷப் பண்டின் தலைமையில், லக்னோ அணி ஆறு வெற்றிகளையும் ஏழு தோல்விகளையும் பெற்றுள்ளது. இதன் விளைவாக, அவர்கள் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளனர். ஆர்சிபிக்கு எதிரான வெற்றி அவர்களை ஆறாவது இடத்திற்கு உயர்த்த உதவும். மறுபுறம், ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி, இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தை அறியும், ஏனெனில் ஒரு வெற்றி அவர்களை குவாலிஃபயர் 1-க்கு அழைத்துச் செல்லும். அங்கு பஞ்சாப் கிங்ஸ் காத்திருக்கிறது.
நடப்பு ஐபிஎல் 2025-ல் பண்ட், 12 இன்னிங்ஸ்களில் 151 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், இதில் அவரது சராசரி 13.73 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 107.10 ஆக உள்ளது. குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எல்எஸ்ஜி-யின் கடைசி போட்டியில் அவர் ஆறு பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 16 ரன்கள் எடுத்தார். இதனால் நடப்பு சீசனில் பண்ட் பெரிய இன்னிங்ஸ் உடன் முடிக்க முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.