டெல்லி: டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அந்த அணியின் உரிமையாளர் கிரண் குமார் கிராந்தி இருவரும் துபாயில் சந்தித்துள்ளனர். அப்போது ஐபிஎல் ரிடென்ஷன் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருவருக்கும் இடையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கான பணிகளை பிசிசிஐ தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் முதல் வாரத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஐசிசி தலைவராக பொறுப்பேற்கவுள்ளார். இதனால் நவம்பர் கடைசி வாரத்திலேயே ஐபிஎல் மெகா ஏலத்தை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். இதனால் நவம்பர் 31ல் ஐபிஎல் மெகா ஏலம் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஐபிஎல் அணிகள் தரப்பில் அக்.31ஆம் தேதி மாலைக்குள் ரிடென்ஷன் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களின் வீரர்களுடனான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ராஜஸ்தான், மும்பை, சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுடன் ஆலோசனையை நடத்தி வருகிறது.
பிசிசிஐ தரப்பில் ரிடென்ஷன் செய்யப்பட்ட வீரர்களுக்கான ஊதியத்தை அதிகரித்துள்ளதால், அணி உரிமையாளர்கள் சிக்கலை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அணியில் ரிடென்ஷன் பேச்சுவார்த்தையால் புயல் அடித்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் டெல்லி அணியை ஜிஎம்ஆர் மற்றும் ஜிண்டால் நிறுவனங்கள் இணைந்து நிர்வகித்து வருகின்றன.
ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை டெல்லி அணியை நிர்வகிக்கும் பொறுப்பு இரு நிறுவனங்கள் இடையே மாற்றப்படும். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக பார்த் ஜிண்டால் டெல்லி அணியை நிர்வகித்து வந்த நிலையில், தற்போது ஜிஎம்ஆர் நிறுவனம் நிர்வகிக்க தொடங்கியுள்ளது. இருந்தாலும் ரிடென்ஷன் தொடர்பான முடிவுகள் மற்றும் பயிற்சியாளர் நியமனம் இரு தரப்பும் இணைந்தே முடிவு எடுக்கும்.
அந்த வகையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், துபாய்-க்கு சென்று டெல்லி அணியின் உரிமையாளரான கிரண் குமார் கிராந்தியை சந்தித்துள்ளார். அப்போது கிரண் குமார் தரப்பில், டி20 கிரிக்கெட் போட்டிகளில் ரிஷன் பண்ட்-ன் கடைசி 3 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது.
கடைசி 3 ஆண்டுகளில் 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 3 அரைசதங்கள் உட்பட 1,209 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரிலும் 3 ஆண்டுகளில் 3 ஆட்டநாயகன் விருதை மட்டுமே பெற்றுள்ளார். இவை சந்திப்பின் போது ரிஷப் பண்ட்-டம் வெளிப்படையாக பேசப்பட்டுள்ளது. இது ரிஷப் பண்ட்-க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்பின்னரே ரிஷப் பண்ட் தனது எக்ஸ் பக்கத்தில், ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்றால், எத்தனை கோடிக்கு ஏலம் செல்வேன் என்று பதிவிட்டுள்ளார். இதனால் டெல்லி அணியின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இருந்தாலும் ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணி உரிமையாளர்கள் இடையே சுமூகமான சூழல் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஸ்ரேயாஸ் ஐயர், டி வில்லியர்ஸ், அஸ்வின் உள்ளிட்டோரை கைவிட்டதை போல் ரிஷப் பண்ட்-யும் டெல்லி அணி நிர்வாகம் கைவிட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. மேலும் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த பயிற்சியாளர் யார் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.