மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் ரூ.26 கோடிக்கு மேல் வாங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். அவருக்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய இரு அணிகளும் கடுமையாக போட்டிபோடும் என்று தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 1,574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் 1,165 இந்திய வீரர்கள், 409 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இதனால் யார் அதிக தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற விவாதம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஏனென்றால் இந்திய நட்சத்திர வீரர்களான ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், முகமது ஷமி, முகமது சிராஜ், சாஹல், அஸ்வின் என்று ஏராளமானோர் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், டெல்லி அணியுடன் 9 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து வந்த ரிஷப் பண்ட், இம்முறை ரீடெய்ன் செய்யப்படவில்லை.
அதனால் என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் தான் இம்முறை அதிக தொகைக்கு ஏலம் செல்லக் கூடிய வீரராக இருப்பார். கடந்த சீசனில் மிட்சல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை இம்முறை ரிஷப் பண்ட் முறியடிப்பார். குறைந்தபட்சம் ரிஷப் பண்ட்-ஐ வாங்குவதற்கு ரூ.25 கோடி முதல் ரூ.26 கோடி வரை செலவு செய்ய 2 அணிகள் தயாராக இருப்பார்கள்.
அந்த 2 அணிகள் யாரென்றால் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் தான். ஏனென்றால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கைகளில் ரூ.110.5 கோடியும், ஆர்சிபி அணியின் கைகளில் ரூ.83 கோடியும் உள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் நேரடியாக மோதிக் கொள்வார்கள். அதேபோல் இவர்களின் பர்ஸ் தொகையை காலி செய்ய வேண்டும் என்று மற்ற அணிகளும் அவரின் மதிப்பை எளிதாக ரூ.20 கோடிக்கு மேல் கொண்டு சென்றுவிடுவார்கள்.
இதனால் ரிஷப் பண்ட் தான் இந்த மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்படுவார் என்று கணித்துள்ளார். மேலும் டெல்லி அணியுடன் ரிஷப் பண்ட் பிரிவதற்கு கேப்டன்சி பதவி மட்டுமல்லாமல், சில அதிகாரங்கள் இல்லாததும் காரணம் என்று தெரிய வந்துள்ளது. சிஎஸ்கே அணியில் தோனிக்கு இருக்கும் அதிகாரத்தை டெல்லி அணியில் ரிஷப் பண்ட் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது.