ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருந்தது. அப்போது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அதிருப்தி அடைந்து கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரிடம் கோபமாக பேசும் காட்சிகள் வெளியாகி இருந்தன. இதை அடுத்து ரசிகர்கள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது போட்டியில் அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போன சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சந்தித்தது லக்னோ. பேட்டிங் வரிசையில் வரிசையாக அதிரடி வீரர்களைக் கொண்ட சன்ரைசர்ஸ் அணி, தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 286 ரன்கள் சேர்த்து மிரட்டி இருந்தது. அப்போது இது காவ்யா மாறனின் அவெஞ்சர்ஸ் அணி என பலராலும் பாராட்டப்பட்டது.

அப்படிப்பட்ட அவெஞ்சர்ஸ் அணியை ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சவால் விட்டு வீழ்த்தியது. இந்த போட்டி துவங்கும் முன்னரே ரிஷப் பண்ட்டின் அதிரடி முடிவு ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தால் பெரிய ஸ்கோரை அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அவர் இந்த அதிரடி முடிவை எடுத்தார். அது குறித்து பேசும் போது, "அவர்கள் எவ்வளவு ரன் எடுத்தாலும் அதை நாங்கள் சேஸிங் செய்வோம்" என்று சொல்லியிருந்தார். இது சாத்தியமா? என பலரும் நினைத்து இருந்தனர்.
ஆனால், ரிஷப் பண்ட் சொன்னதைப் போலவே முதலில் பந்துவீசிய லக்னோ அணி சிறப்பாக செயல்பட்டது. 250 ரன்களுக்கும் மேல் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 190 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. அடுத்து அந்த இலக்கை 16.1 ஓவர்களில் எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த முறை ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியதை அடுத்து உற்சாகத்தில் இருந்த சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்டை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதை அடுத்து அவர் முந்தைய ஆண்டில் கே.எல்.ராகுலை திட்டிய காட்சிகளையும், முதல் போட்டியில் ரிஷப் பண்டை அவர் கோபமாக பேசியதாக வெளியான தகவல்களையும், தற்போது அவர் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்த காட்சிகளையும் ஒப்பிட்டு ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர். காவ்யா மாறனின் அவெஞ்சர்ஸ் அணியை ரிஷப் பண்ட் வீழ்த்தி விட்டதால் கோயங்கா மகிழ்ச்சியில் இருக்கிறார் என பல்வேறு வகைகளிலும் மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.
செய்தி சுருக்கம்: