டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. சிஎஸ்கே அணி பவர் பிளேவில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழப்பது தொடர்கதையாக மாறிவிட்டது. இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 13 வது லீக் ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் கான்வே 8 பந்தில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது ரியான் பராக்கிடம் கேட்ச் ஆனார். இந்த கேட்ச் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ரியான் பராக் 30 மீட்டர் சர்க்களில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது கான்வே கொடுத்த கேட்சை ரியான் பரக் பிடித்த உடனே பந்தை கீழே தூக்கி போட்டு விட்டார். இதை பார்த்தவுடன் கான்வே பெவிலியன் நோக்கி சென்று விட்டார். ஆனால் இது விதிப்படி தவறு என்று சொல்லப்படுகிறது. ஐசிசி விதியின்படி கேட்சை பிடிக்கும் வீரர், குறைந்தபட்சம் ஐந்து வினாடிகள் ஆவது பந்தை கையில் பிடித்திருக்க வேண்டும்.
ஆனால் ரியான் பராக் பந்தை பிடித்த உடனே தூக்கி எறிந்து விட்டார். இதனால் இது அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வர்ணனையாளரும், முன்னாள் நியூசிலாந்து வீரருமான சைமன் தூல், ரியான்பராக் பந்தை பிடித்த உடனே அதை தூக்கி எறிந்து விட்டார். பந்தை சில வினாடிகள் ஆவது கையில் வைத்திருக்க வேண்டும் என்பதை அவர் மறந்துவிட்டார் என்று கூறினார்.
எனினும் நடுவர்கள் இதை கவனிக்க தவறி விட்டார்கள். ஆனால் ஆட்டம் கொஞ்சம் கடந்து சென்ற நிலையில் இந்த கேட்ச் மீண்டும் ரீப்ளேவில் போடப்பட்டு காண்பிக்கப்பட்டது. அப்போது இது விதிகளுக்கு படி அவுட் இல்லை என்று பல கிரிக்கெட் ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். இதே போன்று ஆயுஷ் மாத்ரே அபாரமாக விளையாடி 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 20 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் மாபாகாவின் அபாரமான கேட்ச் ஆல் ஆட்டமிழந்தார். இந்த கேட்ச் சரியாக பிடிக்கப் பட்டதா என்ற ரீப்ளே கூட சரியாக பார்க்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.