மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும்? என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசி இருக்கிறார் அதில் கடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக பேட்டிங் செய்த ரியான் பராக்கை அந்த அணி தக்க வைக்காது என அவர் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ரன் குவித்த வீரர்களில் ஒருவராக இருந்தார் ரியான் பராக். 16 போட்டிகளில் 573 ரன்கள் குவித்து இருந்தார். அவரது சராசரி 52.09 ஆக இருந்தது. அதற்கு முன் ஐந்து ஐபிஎல் சீசன்களில் மொத்தமாக 600 ரன்கள் எடுத்து இருந்த அவர், 2024 ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் அதற்கு ஈடாக ரன் குவித்து மிரள வைத்தார்.

ஆனால், 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ஒரு அணி எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்ற சிக்கலான விதியின் காரணமாக ரியான் பராக்கை ராஜஸ்தான் அணி தக்க வைக்காமல் விடுவித்து விடும் என ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.
2025 ஐபிஎல் ஏலத்துக்கு முன் ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு சம்பளம் அளிக்க வேண்டும் என்பதும் விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி ஒரு அணி தக்கவைக்கும் முதல் மூன்று வீரர்களுக்கு 18 கோடி, 14 கோடி மற்றும் 11 கோடி ரூபாயை சம்பளமாக அளிக்க வேண்டும்.
நான்காவது மற்றும் ஐந்தாவதாக தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு 18 கோடி மற்றும் 14 கோடி சம்பளம் அளிக்க வேண்டும். எனவே, ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்க வைக்கும் என கூறப்படுகிறது. ஒரு வேளை பல நட்சத்திர வீரர்கள் இருந்தால் மட்டுமே நான்காவது வீரராக ஒருவரை தக்க வைத்து அவருக்கு 18 கோடியை சம்பளமாக அளிக்க முடியும். தற்போது ஒவ்வொரு அணியும் ஒரு வீரரை ஏலத்தில் விட்டால் அவருக்கு எந்த அளவுக்கு ஏலத் தொகை கேட்கப்படும் என ஆலோசித்து அதன்படியே அவரை தக்க வைக்கலாமா? வேண்டாமா? என ஐபிஎல் அணிகள் முடிவு செய்து வருகின்றன.
அதன்படி பார்த்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய மூன்று வீரர்களுக்கு அதிக மதிப்பு உள்ளது. அவர்களை ஏலத்தில் விட்டால் அவர்களுக்கு நிச்சயம் சராசரியாக 15 கோடி வரை விலை கேட்கப்படக்கூடும். எனவே, அவர்களை ஏலத்தில் விட்டு விடாமல் தக்க வைக்கவே அந்த அணி முயற்சி செய்யும்.
இந்த மூவரும் சர்வதேச போட்டிகளில் ஆடிய நட்சத்திர வீரர்களாக இருக்கும் நிலையில் ரியான் பராக்கை தக்க வைக்க வேண்டும் என்றால் ராஜஸ்தான் அணி விதிப்படி நான்காவது வீரரை தக்க வைக்க வேண்டும். அதற்கு 18 கோடி ரூபாயை செலவிட வேண்டும். ரியான் பராக்கிற்காக 18 கோடியை செலவிட முடியாது என்ற மனநிலையில் ராஜஸ்தான் ராயர் ராயல்ஸ் இருப்பதாக சுட்டிக் காட்டி இருக்கிறார் ஆகாஷ் சோப்ரா. எனவே, ரியான் பராக்கை ஏலத்தில் விட்டு விட்டு பின்னர் "ரைட் டூ மேட்ச் (RTM)" அட்டையை பயன்படுத்தி அந்த அணி வாங்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார்.