சென்னை: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ராபின் உத்தப்பாவை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவரை பெங்களூருவில் உள்ள கே ஆர் புரம் காவல் நிலைய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
ராபின் உத்தப்பா நடத்தி வரும் நிறுவனத்தில் ஊழியர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பிராவிடன்ட் ஃபண்ட் பணத்தை பி.எஃப் அமைப்புக்கு செலுத்தவில்லை என தெரிய வந்தது. இதை அடுத்து அவர் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

செஞ்சுரீஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிட்டெட் (Centuries Lifestyle Brand Private Limited) என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார் ராபின் உத்தப்பா. அதன் இயக்குனராகவும் பதவி வகித்து வருகிறார். அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட 23.36 லட்சம் ரூபாய் பி.எஃப் பணத்தை அந்த ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் செலுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து சதாக்ஷரா கோபால் ரெட்டி என்ற பி.எஃப். கமிஷனர் மற்றும் கே ஆர் புரம் பகுதிக்கான பி.எஃப். அதிகாரி ஆகியோர் இணைந்து ராபின் உத்தப்பாவுக்கு கைது உத்தரவு பிறப்பித்து உள்ளனர். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 27க்குள் புலகேசிநகர் காவலர்கள் ராபின் உத்தப்பாவை கைது செய்து அழைத்து வர வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அதே சமயம், ராபின் உத்தப்பா அந்த பணத்தை செலுத்தி விட்டால் இந்த கைது உத்தரவு செல்லாது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனவே, அவர் விரைவில் அந்த பணத்தை செலுத்தி கைது உத்தரவில் இருந்து விடுபடவும் வாய்ப்பு உள்ளது.
ராபின் உத்தப்பா 2022 ஆம் ஆண்டு அனைத்து ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருந்தார். அதன் பின் சில சிறிய டி20 லீக் தொடர்களிலும், கிரிக்கெட் போட்டி வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் பல அணிகளுக்காக ஆடிய அவர் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.
அதனால், அவர் சிஎஸ்கே வீரராகவே சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அடையாளப்படுத்தப்பட்டு வருகிறார். இந்த நிலையில், ராபின் உத்தப்பா மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.