அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிகவும் சராசரியாக பேட்டிங் செய்து வருகிறார். ஒரு போட்டியில் மட்டும் அரை சதம் அடித்த அவர். மற்ற போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்து வருகிறார். இந்த நிலையில் அவரை முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி எச்சரித்துள்ளார்.
ப்ரித்வி ஷாவுக்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கும் ஏற்படும் எனவும், கதறி அழுவீர்கள் எனவும் அவர் கூறியுள்ளார். 2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் ஜெய்ஸ்வால் இந்திய டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் துவக்க வீரராக இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஐபிஎல் தொடரில் மிக சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக 67 ரன்கள் சேர்த்த அவர் மற்ற நான்கு போட்டிகளில் மொத்தமாகவே 40 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். மொத்தம் ஐந்து இன்னிங்ஸ்களில் 107 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் ஜெய்ஸ்வால். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மோசமான நிலையில் தான் உள்ளது.
இது குறித்து எச்சரித்த பாசித் அலி, "அவருடைய பசி தீர்ந்துவிட்டது, வயிறு நிரம்பி விட்டது. அவர் தற்போது கிரிக்கெட் மீது கவனத்தை செலுத்தவில்லை. நான் அவருக்கு வெளிப்படையாக ஒரு செய்தியை சொல்லிக் கொள்கிறேன். கிரிக்கெட் உன்னை அழ வைக்கும், ப்ரித்வி ஷாவை பார். கிரிக்கெட்டை நேசி, கிரிக்கெட் மீது உனது ஆர்வத்தை வெளிப்படுத்து" என்று எச்சரிக்கை செய்தியை வெளியிட்டு இருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடரில் துவக்க வீரர் இடத்துக்கு இரண்டு வீரர்கள் ஜெய்ஸ்வாலுடன் போட்டி போட்டு வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த சாய் சுதர்சன் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து சிறந்த ஃபார்மில் இருப்பதை நிரூபித்து இருக்கிறார். அவர் இதுவரை ஐந்து இன்னிங்ஸ்களில் 273 ரன்கள் சேர்த்திருக்கிறார்.
இதில் மூன்று போட்டிகளில் சாய் சுதர்ஷன் அரை சதம் அடித்தார், ஒரு போட்டியில் 49 ரன்கள் சேர்த்தார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடும் பிரியன்ஷ் ஆர்யா இருக்கிறார். அவர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சில போட்டிகளில் அவர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், அடுத்த போட்டியில் 39 பந்துகளில் சதம் அடித்து மிரள வைக்கிறார்.
பிரியன்ஷ் ஆர்யாவிடம் அதிக திறமை உள்ளது என்பதை முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனவே, ஜெய்ஸ்வாலுக்கு நிலையாக ஆடும் சாய் சுதர்சனும், அதிரடியாக ஆடும் பிரியன்ஷ் ஆர்யாவும் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் தனது ஃபார்மை மீட்க வேண்டிய அவசியம் உள்ளது.