டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் சூப்பர் ஓவர் போட்டி ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த சூப்பர் ஓவரில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், எனக்கு காயம் ஏற்பட்டதால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் தான் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை.
ஆனால் தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். நாளை என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து தான் அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும். உண்மையில் நாங்கள் நன்றாக தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.

என்னுடைய பில்டர்களுக்கும் பௌலர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்கு தான். அந்த அளவுக்கு எங்கள் அணியின் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.
நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தை கொடுத்தோம். ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச்சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
டெல்லி அணிக்கு 20 வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கின்றார். நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும்.
ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இதுவரை சூப்பர் ஓவர் வரலாற்றில் அதிக வெற்றியை பெற்ற அணி என்று பெருமையை டெல்லி அணி பெற்று இருக்கிறது. இதற்கு முன்பு பஞ்சாப் மூன்று முறை சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது டெல்லி நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.