ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்களுடைய பத்தாவது தோல்வியை என்று தழுவி இருக்கிறது. பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் 220 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி எட்ட முயற்சித்தது.
தொடக்க வீரர்கள் இருவரும் அபாரமாக விளையாடி பவர் பிளேவில் 89 ரன்களை குவித்திருந்தார்கள். இதனால் ராஜஸ்தான் அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கம்போல் நடுவரிசை வீரர்கள் சொதப்பியதால் அணி தோல்வியை தழுவியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், நாங்கள் இன்றைய ஆட்டத்தில் பிரமாதமாக தொடங்கினோம். இதுபோல் ஒரு தொடக்கத்தை நான் எந்த ஆட்டத்திலும் எதிர்பார்த்து இருக்கவே முடியாது. பவர் பிளேவில் எங்கள் அணியின் வீரர்கள் 89 ரன்கள் சேர்த்து இருந்தார்கள்.
ஆனால் அந்த உத்வேகத்தை எங்களால் அடுத்தடுத்த ஓவர்களில் கொண்டு செல்ல முடியவில்லை. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த இலக்கை நிச்சயமாக எட்டிருக்க முடியும். ஆடுகளமும் இன்று வித்தியாசமாக செயல்பட்டது. எங்கள் அணியின் பல அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள்.
இதனால் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடைசிவரை போட்டி சென்று, நாங்கள் தோல்வியை தழுவி விட்டோம். நாங்கள் இறுதிவரை சென்று போட்டியை முடிக்காமல் சென்று விடுகிறோம். எங்கள் அணியில் உள்ள அனுபவ வீரர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து விளையாட வேண்டும்.
அவர்களுடைய பணியை சரியாக செய்ய வேண்டும். கண்டிப்பாக அடுத்த சீசனில் எங்களுக்கு பல விஷயங்களில் முன்னேற்றம் காண வேண்டியது இருக்கின்றது. ஆனால் அதைப் பற்றி இப்போது நாங்கள் யோசிக்கவில்லை. எங்களுடைய முக்கிய இலக்கு என்னவென்றால் எங்களுடைய கடைசி ஆட்டமான சிஎஸ்கேவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.