ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் ஆர்சிபி அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 28 வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆர்சிபி அணியில் இன்றைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராஜஸ்தான் அணியில் ஹசரங்கா இன்று பரூக்கிக்கு பதிலாக அணிக்கு திரும்பியிருந்தார். இந்த நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை விளையாடியது.

ஒருபுறம் ஜெய்ஸ்வால் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தாலும் சஞ்சு சாம்சன் தடுமாறினார். 19 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் ஒரு பவுண்டரி மட்டுமே அடங்கும். இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுடன் ரியான் பராக், ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இதனை அடுத்து ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ரியான் பராக் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே சேர்த்தார். மறுபுறம் அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அரைசதம் அடித்த பிறகும் ஜெய்ஸ்வால் அபாரமாக பவுண்டரி, சிக்ஸர்களை விரட்டினார்.
முக்கியமான கட்டத்தில் ஜெய்ஸ்வால் 10 பவுண்டரி, இரண்டு சிக்சர் என 47 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். நடு வரிசையில் துருவ் ஜூரல் 35 ரன்கள், சிம்ரன் ஹிட்மையர் 9 ரன்களும், நிதிஷ் ரானா 4 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி பந்துவீச்சு தரப்பில் புவனேஸ்வர் குமார், யாஷ் தயால், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் விராட் கோலி ஒரு அரை சதம் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் அதிக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்வார்.