கவுஹாத்தி: 2025 ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த போட்டியில் அடைந்த தோல்விக்கு, தாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்ததுதான் முக்கிய காரணம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் புலம்பி இருக்கிறார்.
இது ரியான் பராக்கின் சொந்த மைதானம் என்ற நிலையில், அங்கு தோல்வி சரியாக ஆடாதது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. குயின்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார். இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், "170 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். அதை நோக்கித்தான் நாங்கள் ஆடினோம். எனக்கு இங்கு இருக்கும் விக்கெட் குறித்து தெரியும் என்பதால், நான் சற்று விரைவாக விளையாடலாம் என்று நினைத்தேன்."
"ஆனால், இறுதியில் நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்தோம். அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது, குயின்டன் டி காக்கை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். ஆனால், அது நடக்கவில்லை. அதனால், மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த முயன்றோம். அவர் ஆடிய விதம் அற்புதமாக இருந்தது." என்றார் ரியான் பராக்.
அடுத்து தான் மூன்றாம் வரிசையில் விளையாடி வருவது பற்றி பேசிய அவர், "கடந்தாண்டு அணி என்னை நான்காம் வரிசையில் விளையாடுமாறு சொன்னது, அதை நான் செய்தேன். இந்த ஆண்டு என்னை மூன்றாம் வரிசையில் இறங்குமாறு சொல்கிறார்கள். ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக, அணி என்னை எங்கு விளையாட சொல்கிறதோ, அதை நான் ஏற்றுக்கொண்டு செய்கிறேன்."
"இந்த முறை எங்கள் அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். நாங்கள் ஒரு போட்டியில் எப்படி ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். நாங்கள் போட்டியின் சில பகுதிகளில் அதை சரியாக செய்தோம். இனி ஒட்டுமொத்தமாக நல்ல விதமாக போட்டிகளை விளையாடி, போட்டியின் முடிவுகளை எங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். நாங்கள் இங்கிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். எங்கள் தவறுகளை நாங்கள் புரிந்து கொண்டு, அதை இனி செய்யாமல் இருக்க முயற்சி செய்வோம்" என்றார் பராக்.
செய்தி சுருக்கம்: