சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏல தொடர்பான விவாதம் ரசிகர்களிடையே தீவிரமாகியுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தரப்பிலும் வெவ்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. குறிப்பாக 6 முதல் 7 வீரர்களை தக்க வைக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும், 2 முதல் 3 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டன.
இதனால் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் தொடர்பான விவாதத்தில் இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் களமிறங்கியுள்ளார். இதுகுறித்து அஸ்வின் பேசுகையில், மெகா ஏலத்திற்கு முன் ஐபிஎல் உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளும் வைத்துள்ளனர். அவர்களின் அனுபவத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால், எதையும் தவறு என்று சொல்ல முடியாது.

சில அணிகள் தரப்பில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலத்தை நடத்தலாம் என்று யோசனை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில அணிகள் 7 முதல் 8 வீரர்களை தக்க வைக்க அனுமதியளிக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றனர். ஒருவேளை பிசிசிஐ 8 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதியளித்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற ஒரு அணி உற்சாகமாக மெகா ஏலத்தில் பங்கேற்பார்கள்.
சஞ்சு சாம்சன், சாஹல், பட்லர், ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஹெட்மயர், பிரசித் கிருஷ்ணா, போல்ட் என்று ஒரு படையை அவர்களால் தக்க வைக்க முடியும். இதனால் பிசிசிஐ நிர்வாகம் எப்படி முடிவு எடுக்கும் என்பதை பார்க்க வேண்டும். அதேபோல் ஆர்டிம் என்று சொல்லப்படும் ரைட் டூ மேட்ச் என்ற வாய்ப்பையும் மீண்டும் கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
என்னை பொறுத்தவரை ரைட் டூ மேட்ச் போன்ற விஷயம் வீரர்களுக்கு கொடுமையான விஷயம். ஏனென்றால் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ஒரு வீரர் ஏலத்திற்கு வரும் போது, ஒரேயொரு முறை ஐதராபாத் அணி கையை தூக்கி ஏலம் கேட்டால் போதும். அதன்பின் அந்த வீரரை வாங்க கேகேஆர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டு குறிப்பிட்ட தொகைக்கு ஏலத்திற்கு போவார்.
அந்த தொகை ரூ.6 கோடியாக இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அப்போது ஐதராபாத் அணி ரைட் டூ மேட்ச் வாய்ப்பை பயன்படுத்தி அதே ரூ.6 கோடிக்கு அந்த வீரரை பெற்றுக் கொள்ள முடியும். இதில் மும்பை மற்றும் கேகேஆர் அணி உரிமையாளர்கள் சோகமடையவதோடு மட்டும் இல்லாமல், அந்த வீரரும் சோகமடைய வேண்டும்.
ஏனென்றால் ரூ.6 கோடியில் இருந்து ஐதராபாத் அணியும் ஏலத்தில் பங்கேற்றால், அந்த வீரருக்கு கூடுதல் ஊதியம் கிடைக்கும். ஆனால் ரைட் டூ மேட்ச் வாய்ப்பு வீரரின் ஊதியத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் பிசிசிஐ எப்படி முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.