ஐதராபாத்: சையத் முஷ்டாக் அலி தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த நிலையில், ருதுராஜ் ஃபார்முக்கு திரும்பி இருப்பது சிஎஸ்கே ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎம் மெகா ஏலத்திற்கு பின் நடந்து வரும் சையத் முஷ்டாக் அலி தொடரில் நட்சத்திர வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், கடந்த சீசன் முதலே மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே மகாராஷ்டிரா அணியில் விளையாடி வரும் ராகுல் த்ரிப்பாட்டி, முகேஷ் சவுத்ரி உள்ளிட்டோரை மீண்டும் சிஎஸ்கே அணி வாங்கியது.

ருதுராஜ் கெய்க்வாட்-ன் பரிந்துரையின் பெயரிலேயே சிஎஸ்கே அணி அவர்கள் இருவரையும் ஒப்பந்தம் செய்தது. இதனால் சையத் முஷ்டாக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணியின் செயல்பாடுகள் மீது சிஎஸ்கே அணியின் கவனம் திரும்பியது. இதுவரை மகாராஷ்டிரா அணி விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் இருந்தது.
அதேபோல் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 4 இன்னிங்ஸ்களில் விளையாடி 1, 19, 4 மற்றும் 2 என்று மொத்தமாக 26 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் அவரின் ஃபார்ம் குறித்த கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி களமிறங்கியது.
இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய மகாராஷ்டிரா அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 8 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 97 ரன்களை விளாசி அசத்தினார். 3 ரன்களில் ருதுராஜ் கெய்க்வாட் சதத்தை தவறவிட்டதால் பெவிலியனை நோக்கி சோகமாக நடந்து சென்றார்.
இதன்பின் களமிறங்கிய சர்வீசஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக மகாராஷ்டிரா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு திரும்பி இருப்பதால், சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர்.