சென்னை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஏழு போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறி விட்டார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக சிஎஸ்கே அணி 17 வயது வீரரான ஆயுஷ் மாத்ரே வை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் இருந்தது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெளிநாட்டு வீரர் ஒருவருக்கான இடம் காலியாக இருந்தது. இதனால் சிஎஸ்கே அணி வெளிநாட்டு வீரர்களை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் டேவில் பிரவீசை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.
குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது. இதனால் பிரவீசை சிஎஸ்கே அணி தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் டேவிட் பிரவீஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் மஞ்சள் நிற புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் பிரவீஸ் சிஎஸ்கே அணிக்கு வரப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆயுஷ் மாத்ரே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டதாக செய்தி வெளி வந்த நிலையில் சிஎஸ்கே அணி பிரவீசை சேர்த்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இல்லை என்றால் அணியில் இருக்கும் ஏதேனும் வெளிநாட்டு வீரருக்கு காயம் ஏற்பட்டு விட்டதாக கூறிவிட்டு பிரவிசை சேர்க்கிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒரு வேளை பிரவீசை சிஎஸ்கே அணிக்கு வந்தால் அணியின் பேட்டிங் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சிஎஸ்கே அணிக்கு இன்னும் 7 போட்டிகள் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் இந்த மாற்றம் நடைமுறைக்கு வந்தால் பிரவீஸ் அணிக்குள் வந்தாலும் எந்தப் பயனும் இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.