மும்பை : ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படுவதில் தவறான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதாக முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் ஒரு சீசனில் அடிக்கும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பியும், அதிக விக்கெட் வீழ்த்தும் பவுலர்களுக்கு பர்பிள் நிற தொப்பியும் வழங்கப்படும்.
இந்த நிலையில் இது தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள சடகோபன் ரமேஷ், அதிக விக்கெட் எடுக்கும் பவுலர்களுக்கு பர்பிள் நிற தொப்பி வழங்கப்படுவதில் எந்த ஒரு குறையும் இல்லை. ஏனென்றால் பவுலர்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு வழங்கப்படும்.

பர்பிள் தொப்பியை வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சாளர்களும் வெல்வார்கள்.
ஏனென்றால் அனைவரும் தலா நான்கு ஓவர்கள் வீசுவார்கள். இதில் அதிக விக்கெட் யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும். ஆனால் ஆரஞ்சு நிற தொப்பி அப்படி கிடையாது. யார் அதிக ரன்கள் அடிக்கிறார்களோ அவர்களுக்கு தான் வழங்கப்படும்.
அப்படி பார்த்தீர்கள் என்றால் டி20 கிரிக்கெட்டில் முதல் மூன்று பேட்ஸ்மேன்களுக்கு மட்டும்தான் அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்களை குவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் நடுவரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு பெரிய அளவு பந்துகளை எதிர் கொண்டு ரன்களை சேர்க்க வாய்ப்பு கிடைக்காது. இதனால் நான்கு முதல் ஏழாவது பேட்டிங்கில் விளையாடும் வீரர்களுக்கு ஆரஞ்சு நிற தொப்பி வெல்ல வாய்ப்பே கிடைக்காது.
இது எப்படி நியாயமாகும். முதல் மூன்று வீரர்களுக்கு மட்டும்தான் ஆரஞ்சு நிற தொப்பி கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு கிடைக்காது என்பதால் பிசிசிஐ இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
இதற்கு பதிலாக நான்கு முதல் ஏழாவது பேட்டிங் வரிசையில் களமிறங்கும் வீரர்களுக்கு என தனி ஒரு தொப்பியை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும் அதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அந்த தொப்பியை வழங்க வேண்டும் என்றும் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.