ஹைதராபாத்: 2025 ஐபிஎல் தொடரில் 19ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரின் துவக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மீது மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் முறையாக 300 ரன்கள் அடிக்க போகும் அணி என பரவலாக அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பேசப்பட்டு வந்தது. அதற்கு ஏற்ப முதல் போட்டியிலேயே 286 ரன்கள் குவித்து மிரள வைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஆனால் அடுத்த மூன்று போட்டிகளிலும் படுமோசமாக தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தற்போது புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களின் தடுமாற்றத்திலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. மறுபுறம் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று நான்கு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் +0.807 என்பதாக உள்ளது.
அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே இரண்டு தமிழக வீரர்கள் தான். ஒருவர் துவக்க வீரராக விளையாடி வரும் சாய் சுதர்சன், மற்றொவர் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர். அவர்கள் இருவருமே இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் அந்த அணியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.
சாய் சுதர்சன் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் 74 ரன்கள், 63 ரன்கள் மற்றும் 49 ரன்கள் சேர்த்து இருக்கிறார். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி இருக்கிறார். அவர் மீது அதிக நம்பிக்கையும் ஏற்பட்டு இருக்கிறது. உலகின் சிறந்த டி20 சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரஷித் கான் அணியில் இருக்கும் நிலையில் அவரை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறார் தமிழக சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர்.
இதுவரை மூன்று போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் சாய் கிஷோர். அவர் அதிக ரன்களையும் விட்டுக் கொடுக்காமல் சிக்கனமாக பந்து வீசி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு ஓவருக்கு சராசரியாக 7.41 என்ற ரன் விகிதத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார். மேலும் 14.83 என்ற பௌலிங் சராசரியை வைத்துள்ளார். இது மிகவும் சிறப்பான செயல்பாடு என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த இரண்டு தமிழக வீரர்களையும் சமாளித்தால் தான் இன்றைய போட்டியில் வெற்றி பெற முடியும். அந்த அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தால் நிச்சயமாக அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினமான காரியமாக மாறிவிடும். ஏனெனில் அந்த அணி அதிரடி ஆட்டத்திற்காகவே ஒட்டுமொத்த அணியையும் தேர்வு செய்து வைத்துள்ளது. அந்த பாணியை மாற்ற வேண்டும் என்றால் அணியின் அனைத்து தேர்வுகளிலும் சமநிலையை இழக்க நேரிடும். குஜராத் டைட்டன்ஸ் மேலும் ஒரு வெற்றியை பெற்றால் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.