ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சொதப்பலான பேட்டிங்கை பார்த்து காவ்யா மாறன் கோபமும், ஏமாற்றமும் கலந்து காணப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாய் கிஷோர் அபாரமாக செயல்பட்டு இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஹென்ரிச் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சோயிப் அக்தரைப் போல மைதானத்தில் ஓடி வந்து அதை கொண்டாடினார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே 3 விக்கெட்களை இழந்து மோசமான ரன் ரேட்டில் ஆடி வந்த போது கிளாசன் மட்டுமே ஓரளவு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேட்டிங் செய்து வந்தார். அவர் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார். அப்போதுதான் சாய் கிஷோர் வீசிய பந்தில் அவர் பவுல்ட் அவுட் ஆனார்.

ஹென்ரிச் கிளாசன் இருந்திருந்தால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 200 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்பு இருந்ததாக அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவரது விக்கெட் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் அதிர்ச்சி அடைந்தார்.
தனது வாயை பொத்திக்கொண்டு அந்த விக்கெட்டை நம்ப முடியாமல் பார்த்தார். முன்னதாக அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆட நினைத்து தனது விக்கெட்டை முகமது சிராஜ் பந்துவீச்சில் பறிகொடுத்தபோதும் காவ்யா மாறன் கோபமடைந்திருந்தார். எதற்காக அபிஷேக் ஷர்மா தனது விக்கெட்டை தானே பரிசளித்தார் என்பது போல அவரது முகபாவம் இருந்தது.
300 ரன்கள் அடிக்கும் அணி என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை காவ்யா மாறன் உருவாக்கிய நிலையில் அந்த போட்டியில் 152 ரன்கள் எடுப்பதற்கு திணறியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதிகபட்சமாக நிதிஷ் குமார் ரெட்டி 31 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவர் 34 பந்துகளில் இந்த ஸ்கோரை எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் கேப்டன் பாட் கம்மின்ஸ் எட்டாம் வரிசையில் இறங்கி 9 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். அதன் காரணமாகவே அந்த அணி 150 ரன்களை தாண்டியது.
இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாய் கிஷோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் சேசிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 16.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.