அகமதாபாத்: ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக தமிழக வீரர் ஒருவர் ஒரே சீசனில் அதிக ரன் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்று வரலாறு படைத்திருக்கிறார். இதுவரை 18 ஆண்டுகள் ஐபிஎல் தொடர் நடந்திருக்கிறது. இதில் ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவிலும் அதிக ரன் குவித்த வீரருக்கு ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். அதுபோல அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கு ஊதா நிற தொப்பி வழங்கப்படும். இதற்கு முன் நடந்த 17 ஐபிஎல் தொடர்களில் எப்போதும் தமிழகத்தைச் சேர்ந்த எந்த ஒரு வீரரும் இந்த இரண்டு தொப்பிகளையும் வென்றதில்லை.
இந்த நிலையில், முதன்முறையாக சாய் சுதர்சன் 2025 ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் சேர்த்து, இந்த ஆண்டிலே அதிக ரன் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை வென்றார். 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்த நிலையில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை சாய் சுதர்சன் வென்றார். மேலும், எமர்ஜிங் பிளேயர் என்ற விருதையும் வென்றார்.

அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஒவ்வொரு போட்டியிலும் ரன் சேர்த்து அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் ஈர்த்தார். மொத்தம் 15 இன்னிங்ஸ்களில் 759 ரன்கள் சேர்த்தார். ஒரு சதம் மற்றும் ஆறு அரை சதங்களை அடித்திருந்தார். அவரது பேட்டிங் சராசரி 54.21 என்பதாக இருந்தது. ஸ்ட்ரைக் ரேட் 156.17 ஆக இருந்தது.
துவக்க வீரராக அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்றுத்தந்தார். குஜராத் டைட்டன்ஸ் அணி எலிமினேட்டர் போட்டி வரை முன்னேறியது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. அந்தப் போட்டியிலும் கூட சாய் சுதர்சன் அபாரமாக விளையாடி 80 ரன்கள் சேர்த்திருந்தார்.
அவருக்கு அடுத்தபடியாக இந்த ஆண்டு அதிக ரன் குவித்த வீரராக இருப்பது சூர்யகுமார் யாதவ். அவர் 717 ரன்கள் எடுத்திருக்கிறார். விராட் கோலி இந்த ஆண்டு 657 ரன்கள் சேர்த்து மூன்றாவது இடத்தைத்தான் பிடித்திருக்கிறார். சூர்யகுமார் யாதவ், விராட் கோலி போன்ற இந்திய ஜாம்பவான் வீரர்களை சாய் சுதர்சன் முந்தி முதலிடத்தைப் பிடித்து இருக்கிறார்.
இந்த ஐபிஎல் செயல்பாடு அவருக்கு இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அதிலும் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.