கொல்கத்தா: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐந்தாவது முறையாக அரை சதம் கடந்து அசத்தினார். இதன் மூலம் 8 இன்னிங்ஸில் ஐந்து அரை சதம் அடித்து சாய் சுதர்சன் மீண்டும் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றி இருக்கிறார்.
23 வயதான சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஐந்து போட்டிகளில் விளையாடி 145 ரன்கள் எடுத்து தாம் ஒரு திறமையான வீரர் என நிரூபித்தார். இதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்களும், 2024 ஆம் ஆண்டு 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களும் சாய் சுதர்சன் அடித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது சாய் சுதர்சன் 8 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 417 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 52 என்ற அளவில் உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் 152 என்று அளவில் இருக்கிறது. சாய் சுதர்சன் நடப்பு தொடரில் மட்டும் ஐந்து அரை சதம் அடித்திருக்கிறார். மொத்தமாக 42 பவுண்டரிகளும், 15 சிக்சர்களையும் சாய் சுதர்ஷன் விளாசி இருக்கிறார்.
இதன் மூலம் சாய் சுதர்சனுக்கு ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்திருக்கிறது. லக்னோ அணியின் இடம்பிடித்து இருந்த நிக்கோலஸ் பூரான் 368 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சாய் சுதர்சனிடம் கடந்த போட்டியில் இருந்து ஆரஞ்சு நிற தொப்பியை வாங்கி இருந்தார். தற்போது சாய் சுதர்சன் மீண்டும் ஒரு அரை சதம் அடித்து நிக்கோலஸ் பூரானை தாண்டி சென்று விட்டார்.
தற்போது இருவருக்கும் இடையே 49 ரன்கள் வித்தியாசம் இருக்கின்றது. இந்த நிலையில் சாய் சுதர்சன் இந்திய ஒரு நாள் அணியில் வெறும் மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார். டி20 போட்டியில் ஒரு ஆட்டத்தில் களமிறங்கி இருக்கிறார். ஆனால் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
சாய் சுதர்சன் கடைசியாக இந்திய அணிக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் 2023 ஆம் ஆண்டும், டி20 கிரிக்கெட்டில் 2024 ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார். இடையில் சாய் சுந்தரசனுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் மீண்டும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். இதனால் சாய் சுதர்சனை உடனடியாக இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.