அகமதாபாத்: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் நீண்ட காயத்திற்கு பின் களம் இறங்கியுள்ள சாய் சுதர்சன் தொடர்ந்து அபாரமாக விளையாடி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக சாய் சுதர்சன் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனால் சில காலம் அவர் விளையாடாமல் இருந்தார். இந்த சூழலில் ஐபிஎல் தொடரில் மீண்டும் தன்னுடைய திறமையை பயன்படுத்தி அசத்தி வருகிறார். இவரை பார்த்து ரசிகர்கள் தமிழ்நாட்டின் கோலி என்று அழைக்கிறார்கள். இதற்கு காரணம் தொடர்ந்து பெரிய ஸ்கோர் அடிக்கும் திறமையையும் பழக்கத்தையும் இவர் வைத்திருக்கிறார்.

கடந்த ஐந்து போட்டிகளில் மூன்று முறை சாய் சுதர்சன் அரைசதம் மேல் அடித்திருக்கிறார். குறிப்பாக அகமதாபாத்தில் மட்டும் 15 இன்னிங்ஸில் சாய் சுதர்சன் 822 ரன்கள் அடித்திருக்கிறார். சராசரி 58 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 156 என்ற அளவில் இருக்கிறது. ஆறு அரைசதமும், ஒரு சதமும் அகமதாபாத்தில் அடித்திருக்கிறார்.
இன்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக கூட ஆர்ச்சரின் அபார பந்துவீச்சை அடித்து ஆட முற்படாமல் அதை அபாரமாக தற்காத்துக் கொண்டு பின்னர் அதிரடி காட்டி ரன்களை சேர்த்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் சுதர்சன், இன்றைய ஆடுகளத்தில் வந்து முதலில் கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஆனால் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருந்தது.
சிறப்பாக பந்து வீசி நெருக்கடியை கொடுத்தார். எனினும் நாங்கள் அதற்கு ஏற்ற மாதிரி எங்கள் ஆட்டத்தை கட்டமைத்துக் கொண்டோம். ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதை உணர்ந்து கூடுதல் ரன்களை சேர்க்க முயற்சி செய்வோம். ராஜஸ்தான் வீரர்கள் இன்று அபாரமாக செயல்பட்டார்கள்.
நாங்கள் இன்னும் 15 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். எனினும் இது ஒரு நல்ல ஸ்கோர் தான். பனிப்பொழிவு இன்று இருக்காது என்று நினைக்கின்றேன். ஒரு அணியாக கையில் விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு கடைசி ஐந்து ஓவரில் பெரிய ஸ்கோர்களை அடிக்க வேண்டும் என நினைக்கின்றோம். நான் தொடர்ந்து பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. கள சூழலுக்கும் போட்டி சூழலுக்கும் ஏற்ற வகையில் தான் நான் விளையாடுகின்றேன்.
கடந்த வருடம் ஆன்டிரிச் நோக்கியாவை எதிர்கொண்டேன். ஆர்ச்சர் விட அவர் கொஞ்சம் வேகமாக பந்து வீசுவார் என்று நினைக்கின்றேன். ஆனால் இன்று ஆடுகளத்தில் சிறப்பாக பயன்படுத்தி ஜோப்ரா நெருக்கடி கொடுத்தார். ஜோப்ரா ஆர்ச்சர் திடீரென்று வேகத்தை குறைத்து பந்து வீசுவார். அதையும் பார்த்து தான் விளையாட வேண்டும் என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார்.