டெல்லி: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி அணிக்கு எதிரான 60-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் மற்றும் கில் ஜோடி ஆகியோர் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 205 ரன்கள் சேர்த்து இருக்கிறது.சாய் சுதர்சன் 56 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் நடப்பு சீசனில் 600 ரன்கள் தொட்ட முதல் வீரர் என்ற பெருமையும் சாய் சுதர்சனுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் அணி தகுதி பெற்றது.

அது மட்டுமல்லாமல் ஆர் சி பி மற்றும் பஞ்சாப் அணியும் பிளே ஆப்க்கு சென்று விட்டது. சாய் சுதர்சனின் இந்த அபார சதத்தால் தற்போது அவருக்கு மீண்டும் ஆரஞ்சு நிற தொப்பி கிடைத்தது. சூரியகுமாரிடமிருந்த அந்த ஆரஞ்சு நிற தொப்பி தற்போது சாய் சுந்தரசனுக்கு வந்துவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாய் சுதர்சன், ஒரு போட்டியை முழுமையாக கடைசி வரை நின்று வெற்றியை தேடி தரும்போது மகிழ்ச்சி அளிக்கும்.
ஐபிஎல் தடைபட்டபோது நான் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். முதல் ஆறு ஓவருக்கு பிறகு நாங்கள் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். இரண்டு மூன்று ஓவர்களில் நாங்கள் 12 ரன்களுக்கு மேல் அடித்தது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. போட்டியின் ஆரம்பத்தில் சில ரிஸ்க்களை எடுத்தேன். ஆனால் அது எனக்கு கை கொடுக்கவில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், என் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினேன். இதன் மூலம் கடைசி வரை நின்று போட்டியை கொண்டு செல்ல முடியும் என்று நினைத்தேன். இதற்காக என்னுடைய பேட்டிங் திறனை விரிவு படுத்தினேன். என்னுடைய பேட்டிங்கில் நான் பெரும் மாற்றம் எதையும் செய்யவில்லை. ஆனால் மனதளவில் நான் தற்போது சுதந்திரமாகவும் மனதில் தோன்றும் விஷயங்களை களத்தில் செய்யும் வீரராகவும் மாறி வருகின்றேன்.
சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நான் வேகமாக ரன்கள் சேர்க்கின்றேன். இதன் மூலம் 15வது ஓவருக்கு பிறகு என்னுடைய பேட்டிங் கொஞ்சம் முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று நினைக்கின்றேன். எனக்கும் கில்லுக்கும் நல்ல ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சார்ந்து விளையாடுகின்றோம்.
எதிரில் இருக்கும் பேட்ஸ்மேன் நன்றாக விளையாடும் போது ஸ்ட்ரைக்கை மாற்றுவது என்பது மிகவும் முக்கியம். அதையும் நாங்கள் சிறப்பாக செய்கின்றோம் என்று சாய் சுதர்சன் கூறியுள்ளார்.