மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் முக்கிய விதி மாற்றம் ஒன்றைக் கொண்டு வருவது பற்றி பிசிசிஐ கேப்டன்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அதுவும் முகமது ஷமி கேட்டுக்கொண்டதற்காக இந்த விதி மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போதும் முகமது ஷமி பேட்டி அளித்திருந்தார்.
அப்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்தின் மீது எச்சிலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என அவர் கோரி இருந்தார். ஏனெனில், பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

கொரோனாவின் போது விதிக்கப்பட்ட எச்சிலைப் பயன்படுத்தக் கூடாது என விதிக்கப்பட்ட இந்த விதியால் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே அழிந்து வருகிறது. இந்த நிலையில்தான் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் மன்னனான முகமது ஷமி இந்தக் கோரிக்கையை வைத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இது குறித்து மௌனம் காத்து வரும் நிலையில் பிசிசிஐ அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது.
2025 ஐபிஎல் தொடரில் எச்சிலைப் பயன்படுத்துவதற்கான தடையை நீக்கினால் சர்வதேச கிரிக்கெட்டிலும் அது அமலுக்கு வரும். ஏனெனில். உலகின் முக்கிய கிரிக்கெட் தொடராக ஐபிஎல் இருப்பதால், அதன் மூலம் அழுத்தம் அளிக்கப்படும். எனவே, இந்த தடையை நடப்பு ஐபிஎல் தொடரில் நீக்குவதற்கான முயற்சியை எடுக்க உள்ளது பிசிசிஐ.
முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள பத்து அணிகளின் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலான அணிகளின் கேப்டன்கள் இதற்கு ஆதரவாக பேசினால் இந்தத் தடையை நடப்பு ஐபிஎல் தொடரிலேயே நீக்க பிசிசிஐ முயற்சி செய்யும்.
வரும் மார்ச் 22 முதல் 2025 ஐபிஎல் தொடர் துவங்க உள்ள நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தடையை நீக்க முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. எனினும், இது சாதாரண ஒரு விதி மாற்றம் தான் என்பதாலும், இதனால் போட்டிகளின் திட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்பதாலும், இதை இரண்டு நாட்களுக்குள் அமல்படுத்தி விட முடியும் எனவும் கூறப்படுகிறது.