சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டு வீரர்கள் 2025 ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஐபிஎல் தொடரின் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், மே 29 அன்று தொடங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர்களில் அவர்கள் இருவரும் இங்கிலாந்து அணிக்காகத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி இருவரும் விலகினர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்றால், ஐபிஎல் தொடரிலிருந்து முன்கூட்டியே விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக அவர்கள் இருவரும் இப்போதே ஐபிஎல் தொடரிலிருந்து விலகிவிட்டதாகத் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. சாம் கரனின் பெயர் ஒருநாள் அணி மற்றும் டி20 என இரண்டிலும் இடம் பெறவில்லை. எனினும், அவர் 2025 ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
ஜேமி ஓவர்டனின் பெயர் டி20 அணியில் மட்டுமே இடம் பெற்று உள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடர் சிஎஸ்கே அணியின் போட்டிகள் முடிந்த பின்னரே தொடங்குகின்றன. ஆனாலும். ஜேமி ஓவர்டன் இனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்.
எஞ்சிய போட்டிகளுக்கு மட்டும் மாற்று வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்ற விதியை ஐபிஎல் நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. எனவே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரைவில் இந்த இரண்டு வீரர்களுக்கும் மாற்றாக வேறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்யுமா அல்லது எஞ்சிய போட்டிகளை இருக்கும் வீரர்களை வைத்து சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, 6 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.