சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் வீரர் ஒருவரை உள்ளூர் வீரராக நான்கு கோடி ரூபாய் சம்பளத்துக்கு தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக தோனியை உள்ளூர் வீரராக நான்கு கோடி சம்பளத்துக்கு சிஎஸ்கே அணி தக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது மற்றொரு வீரராக சமீர் ரிஸ்விவை சிஎஸ்கே அணி தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடருக்கு முன் நடந்த மினி ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை வாங்கி இருந்தது. அவரை சிஎஸ்கே அணியின் ஃபினிஷர் ஆக்கும் முயற்சிகள் நடந்தன. அது வெற்றி பெறவில்லை. எனினும், தோனி சமீர் மீது நம்பிக்கை வைத்துள்ளார். எனவே, 20 வயதே ஆன அவருக்கு மேலும் சில ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

2025 ஐபிஎல் முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைக்கவோ அல்லது ரைட் டூ மேட்ச் அட்டையை பயன்படுத்தி வாங்கிக் கொள்ளவோ முடியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை பல வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை மட்டும் தக்க வைக்கக் கூடும் என கூறப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மதிஷா பதிரானா, தோனி மற்றும் சமீர் ரிஸ்வியை சிஎஸ்கே அணி தக்கவைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு தக்க வைக்கப்படும் ஒவ்வொரு வீரருக்கும் எவ்வளவு சம்பளம் அளிக்க வேண்டும் என்ற விதியை அமல்படுத்தி உள்ளது பிசிசிஐ. அதன்படி முதலில் தக்க வைக்கப்படும் வீரருக்கு 18 கோடி அளிக்க வேண்டும். அடுத்து தக்க வைக்கப்படும் இரண்டு வீரர்களுக்கு 14 கோடி மற்றும் 11 கோடி அளிக்க வேண்டும். பின்னர் நான்காவது மற்றும் ஐந்தாவதாக தக்க வைக்கப்படும் வீரர்களுக்கு மீண்டும் 18 கோடி மற்றும் 14 கோடி அளிக்க வேண்டும்.
இந்த சிக்கலால் சிஎஸ்கே அணி மூன்று சர்வதேச வீரர்களையும், இரண்டு உள்ளூர் வீரர்களையும் தக்க வைக்கும் என கூறப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச போட்டிகளில் ஆடாத இந்திய வீரர்கள் உள்ளூர் வீரர்கள் ஆகவே கருதப்படுவார்கள் என்பதால் தோனியும் உள்ளூர் வீரராகவே கருதப்படுவார். அந்த வகையில் தோனி மற்றும் சமீர் ரிஸ்வியை உள்ளூர் வீரர்களாக சிஎஸ்கே அணி தக்க வைக்கும்.